| இந்து ராமும் இலங்கை நெருக்கடியும் |
|
|
| தினக்குரல் | |
| 20. September 2007 22:31 | |
|
இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டும் கடந்த வாரம் இலங்கை- இந்திய நட்புறவுச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு ராம் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கை இனநெருக்கடி மற்றும் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் தனதுரையில் அவர் தெரிவித்த கருத்துகள் எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இனநெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் ஒரு கால கட்டத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட அனுபவத்தையும் ராம் கொண்டிருக்கிறார். சிறந்த அரசியல் விமர்சகர் என்று வர்ணிக்கப்படுகின்ற ராம் இலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தை இன்னமும்கூட சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளில் அவருக்கு இருக்கின்ற முனைப்பு காரணமாக சிங்கள அரசியல் தலைமைத்துவங்கள் தொடர்பில் சரியானதொரு மதிப்பீட்டை அவரால் இன்று செய்ய முடியாதிருக்கின்றது. விடுதலைப் புலிகளுடன் நடத்தப்படக்கூடிய எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியா பங்கேற்க வேண்டுமென்று எதிர்பார்க்கமுடியாது என்கின்ற அதேவேளை, தமிழர்களுக்கு கணிசமான அளவுக்கு சமத்துவத்தை உறுதிசெய்யக்கூடிய தீர்வொன்றைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் உற்சாகத்தை இந்தியா கொடுத்துவரும் என்று கூறியிருக்கும் ராம், 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கை (முன்னைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு) மாற்றத்துக்குள்ளாகியிருக்கிறது. 4 அரசாங்கங்களும் ஆறு பிரதமர்களும் மாறிய பின்னரும் கூட அந்தக் கொள்கை தொடர்ந்தவண்ணமேயிருக்கிறது. புதுடில்லியில் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இதே கொள்கையைப் பின்பற்றுவதைத் தவிர, வேறு வழியே இல்லை என்று கூறியிருக்கிறார். 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்செயல் 1991 ஆம் ஆண்டு வரை இருதரப்பு உறவுகளில் நேரடித் தாக்கத்தைக் கொண்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டும் ராம், இன்று இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் 1983 நிகழ்வுகள் எந்தவிதத்திலும் செல்வாக்கைச் செலுத்துவதாக இல்லையென்றும் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையின் தற்போதைய அரசாங்கம் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான நிகழ்ச்சித் திட்டமெதையும் கொண்டிருக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள ராம் தவறிவிட்டாரோ அல்லது புரிந்துகொண்டும் புரியாதமாதிரி பேசுகிறாரோ தெரியவில்லை. சமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்ற பதங்கள் முக்கியமல்ல. தமிழர்கள் உட்பட சமுதாயத்தின் சகல பிரிவினரதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான தோற்றத்தில் சமஷ்டி கட்டமைப்பைக் கொண்ட ஒரு அதிகாரப்பரவலாக்கல் திட்டம் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்வது பயனுடையதாக இருக்கும் என்று குறிப்பிடும் ராம் கிழக்கில் இராணுவம் பெற்ற அண்மைய வெற்றிகளைத் தொடர்ந்து அரசியல் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை குறித்து அரசாங்கத்துக்கு மதியுரை கூறியிருக்கிறார். அத்துடன், விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருக்கின்ற தற்போதைய நிலைவரம் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை விரைவாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒரு பெரிய அனுகூலத்தைக் கொடுக்கிறது என்றும் அவர் மதிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப் புலிகள் பலமாக இருந்தால் அரசியல் தீர்வொன்றை முன்னெடுப்பது சிரமமான காரியம் என்பதே ராம் சொல்வதற்கு முயற்சித்திருக்கின்ற செய்தி. அவரின் கருத்துப்படி விடுதலைப் புலிகள் பலவீனமாக இருப்பதாகத் தென்படுகின்ற தற்போதைய சூழ்நிலையில், அரசியல் தீர்வு முயற்சிகளில் அரசாங்கம் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறது? இதற்கு ராம் தனது பேச்சிலேயே பதிலைச் சொல்லியிருக்கிறார் இனநெருக்கடி தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கின்ற எண்ணம் பற்றி தனிப்பட்ட முறையில் நாம் கேள்விப்படுகின்றவற்றுக்கும் களத்தில் நாம் காண்கின்றவற்றுக்கும் இடையேயான வெற்றிடம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதுவே இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திடமிருந்து இந்தியத் தரப்பினால் எதிர்பார்க்கப்படுவதாகும். தனிப்பட்ட முறையில் தங்களுடன் பேசுகின்ற சந்தர்ப்பங்களில் அரசியல் தீர்வில் அக்கறை காட்டுவதாக அரசாங்கத் தலைவர் கூறுகின்ற போதிலும், நடைமுறையில் எதையுமே செய்வதாக இல்லை என்பதைத் தவிர இதன் அர்த்தம் வேறு என்னவாக இருக்க முடியும்? அரசியல் தீர்வுபற்றிய இலங்கை அரசாங்கங்களின் பசப்புவார்த்தைகளும் வஞ்சகத்தனமான அணுகுமுறைகளும் தமிழர்களுக்கு ஒன்றும் புதியனவல்ல. அவை அரை நூற்றாண்டுக்கும் அதிகமான கால வரலாற்றில் தமிழர்களின் வேதனை அனுபவங்கள். காலங்காலமாக தமிழ்த் தலைமைத்துவங்களை ஏமாற்றியது போன்று விடுதலை புலிகளையும் ஏமாற்றி அரசியல் செய்ய முடியவில்லை என்பதுதான் சிங்கள அரசியல் தலைமைத்துவங்களுக்கு இன்று இருக்கின்ற பெரிய சங்கடமான நிலைமை. தமிழர் அரசியலில் விடுதலை புலிகள் இன்று பிரதானப்படுத்தப்படுகின்ற நிலைமை தோன்றியதற்கு காரணம் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இதய சுத்தியுடன் அரசாங்கங்கள் முயற்சிக்காததேயாகும். தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வொன்று காணப்படாததன் விளைவாகவே விடுதலை புலிகள் தோன்றினார்கள். அவர்களின் தோற்றத்திற்கு முன்னரேயே இருந்து வந்திருக்கின்ற பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு அவர்களை இன்று ஒரு தடையாக நோக்குவதில் உள்ள அரசியல் அதர்மம் புரிந்து கொள்ளப்படவேண்டும். கிழக்கில் விடுதலை புலிகளை தோற்கடித்ததாகக் கூறிய அரசாங்கம் அந்தமாகாணத்தில் இப்போது பிரச்சினையில்லை என்று அறிவித்ததை ராம் போன்றவர்கள் எவ்வாறாக அர்த்தப்படுத்துகிறார்கள்? வடக்கிலும் விடுதலை புலிகளைத் தோற்கடித்துவிட்டால் அங்கும் பிரச்சினை இல்லை என்றாகி விடுமா? விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருப்பதாகத் தென்படுகின்ற நிலைவரம் அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு பெரிய அனுகூலமாக அமைகிறது என்று பேசுபவர்கள் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கான உத்வேகத்தையே மறைமுகமாகக் கொடுக்கிறார்கள். விடுதலை புலிகள் இல்லையென்றால் அரசியல் தீர்வு என்ற ஒன்றைப்பற்றி அரசாங்கம் பேசப்போவதேயில்லை. ராம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இதுவே இன்றுள்ள யதார்த்த நிலை! (தினக்குரல்: ஆசிரியர் தலையங்கம் -20-09-2007) கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




என்று அவர் பொதுவில் பேசினாலும் கூட, அவர் கருத்துகளைத் தெரிவிக்கின்ற பாணி அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகின்ற சக்திகளுக்கே மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. 
