| பொய்ப் பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த சூசை |
|
|
| தாயகன் | |
| 1. October 2007 03:58 | |
தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் போர் தொடுத்துவரும் இலங்கை அரச பேரினவாதம் அண்மைக் காலமாக உளவியல் யுத்தத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது.
யுத்தத்தில் இராணுவ ரீதியாக பெறப்படும் வெற்றிகளைவிட உளவியல் யுத்தம் மூலம் அதிக நன்மைகளைப் பெறமுடியுமென்ற நிதர்சனத்திற்கேற்பவே தற்போதைய அரசும் பேரினவாத ஊடகங்களும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக விடுதலைப்புலிகளுக்குள் அதிகாரப் போட்டியும் உள் மோதல்களும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை பொட்டம்மானினால் கொல்லப்பட்டுவிட்டதாகவும் விஷமப் பிரசாரங்கள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் பிரசாரங்களினால் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களிடையே ஒரு குழப்ப நிலை ஏற்பட்ட அதேவேளை, பேரினவாத இனங்களிடையே பெருமகிழ்ச்சியும் ஏற்பட்டது.
ஆனால், கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தொடர்பாக அரசும் பேரினவாத, தேசவிரோத ஊடகங்களும் திட்டமிட்டு மேற்கொண்டுவந்த பொய்ப்பிர சாரங்களுக்கும் புரளிகளுக்கும் கட்டுக்கதைகளுக்கும் கேணல் சூசை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விடுதலைப் புலிகளுக்குள் அதிகாரப் போட்டி, பிரபாகரனுக்கும் சூசைக்கும் முறுகல், பொட்டம்மானுக்கும் சூசைக்குமிடையே அதிகாரப்போர், சூசை வீட்டுக் காவலில், சூசையை பங்கருக்குள் போட்ட பொட்டம்மான் என செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு தம்மை திருப்திப்படுத்திக் கொண்ட ஊடகங்கள் அதன் உச்சக்கட்டமாக கேணல் சூசையும் அவரது குடும்பமும் முக்கிய தளபதிகள் சிலரும் இந்தியாவுக்கு தப்பிச் செல்கையில் பொட்டம்மானின் குழுவினரால் தாக்கப்பட்டதனால் சூசை படுகாயமடைந்துள்ளதாகவும் இவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கதையளந்தன. இன்னும் சில ஊடகங்கள் கேணல் சூசையின் படகை பொட்டம்மான் குண்டுவைத்து தகர்த்ததாகவும் சூசையின் மைத்துனரான கேணல் ரமேஸ் தொடர்பாகவே இவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகளை வெளியிட, இன்னும் சிலரோ அண்மைக்காலமாக கடற்புலிகளுக்கு ஏற்பட்டுவரும் தோல்விகளுக்கு சூசைதான் காரணமென பிரபாகரன் கருதுவதால் சூசையை பங்கருக்குள் போட்டுவிட்டதாகவும் கூறினர். ஆனால், வழக்கம்போலவே அனைத்துக்கும் மௌனம் சாதித்த புலிகள் இதற்கும் மௌனமாக இருந்தமை தமிழ் மக்களையும் சிறிது குழப்பமடையவே செய்தது. ஏனெனில் சூசை படுகாயமடைந்ததும் அவரின் 5 வயது மகன் உயிரிழந்ததும் உறுதிப்படுத்தப்பட்டதினால் தமிழர் தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழரும் சிறிது குழப்பமடைந்தனர். ஆனால், அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் கேணல் சூசை. கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மற்றும் ஹசிறகு விரித்த புலிகள்' இறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட கேணல் சூசை பேரினவாதிகளின் பிரசாரங்களை தவிடுபொடியாக்கியதுடன் போர் முரசு கொட்டும் இலங்கையரசுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார். இங்கு உரையாற்றிய கேணல் சூசை, எம்மை இராணுவ நடவடிக்கை மூலம் பணிய வைக்கலாமென எவராவது நினைத்தால் அதற்குரிய பலனை அவர்கள் அனுபவிப்பார்கள். நாம் எதற்கும் தயார். எம்மையோ எமது மண்ணையோ எவரும் அடி பணியவைக்க முடியாது. இலங்கையரசு தனது முழுவளங்களையும் பயன்படுத்தி மேற்கொண்ட ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின்போது வன்னி புலிகளிடமிருந்து பறிபோகின்றதென முழு மக்களும் முழு நாடும் ஏன் முழு உலகமும் நினைத்தது. ஆனால், அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையையே தலைகீழாக்கினார் எமது தலைவர். தலைவருடைய காலத்தினுள் எமது இனத்தினுடைய விடுதலையை பேச்சு நடத்தி பெற முடியாதென எமக்குத் தெரியும். இராணுவ பலத்தின் மூலமே எமது விடுதலையைப் பெறமுடியும். அதற்குரிய நடவடிக்கைகளில்தான் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தார். அத்துடன் தன்னைப்பற்றிய செய்திகள் தொடர்பாக கேணல் சூசை கூறுகையில்; இலங்கையரசு விஷமப் பிரசாரத்தை இன்று நேற்று மேற்கொள்ளவில்லை. அது காலம் காலமாக உளவியல் ரீதியாக சிங்கள தேசத்தையும் உலகத்தையும் ஒரு புரட்டுப் புரட்டி அப்படியாவது ஆத்ம திருப்தியை காணலாமென்றே பிரசாரம் செய்கிறது. இலங்கை அரசின் பிரசாரங்கள் எல்லாவற்றிற்கும் நாங்கள் பதிலளித்துக் கொண்டிருப்போமென்றால் நாளாந்தம் மறுப்பறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்க வேண்டும். என் தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள்தான் அதிகளவில் குழம்பிப் போயிருக்கிறார்கள். நான் படுகாயமடைந்தது உண்மை. எனது மகன் உயிரிழந்ததும் உண்மை. ஆனால் நடந்த சம்பவம் தான் வேறு. எமது படையினரின் வேகப் படகுகளை பரீட்சாத்தமாக ஓடிப்பார்த்தபோது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் படகொன்று எனது படகுடன் மோதியது. இதனால் நான் காயப்பட்டேன். எனது மகன் உயிரிழந்தார். அவருடன் நின்ற போராளியும் உயிரிழந்தார். 2,3 பேர் காயமடைந்தனர். இதுதான் நடந்தது. என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கேள்விபட்ட பேரினவாத ஊடகங்களும் தமிழர் விரோத ஊடகங்களும் தமது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஏட்டிக்குப் போட்டியாக தமது கற்பனைத் திறனை வெளிக்காட்டத் தொடங்கினார்கள். சிலர் அருகிலிருந்து பார்த்தவர்களைப் போன்று புனைகதைகளை உருவாக்கி அதனை தொடர்களாகவும் வெளியிட்டு தம்மைத்தாமே திருப்திப்படுத்திக் கொண்டார்கள். புலிகளின் தலைவர், தளபதிகளைப் பற்றி இவ்வாறான புரளிகள் வெளிவருவது இது முதல் தடவையல்ல. 1988 ஆம் ஆண்டு பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான புரளிகளிலிருந்து இன்றைய சூசை வரை பல புரளிகள் கிளப்பிவிடப்பட்டன. ஆனால், அவையணைத்தும் பின்னர் தவிடுபொடியாகின. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார், கடல்கோளில் பிரபாகரனும் உயிரிழந்து விட்டார், சூசை சிங்கப்பூருக்கு தப்பியோடிவிட்டார், அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்பதில் பொட்டம்மானுக்கும் தமிழ்ச்செல்வனுக்குமிடையே அதிகாரப்போட்டி, தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார், அவரின் இடத்துக்கு இளந்திரையன் நியமிக்கப்பட்டுள்ளார், சூசையை கொல்ல பொட்டம்மான் சதி, புலிகளின் தளபதிகள் தப்பியோடுகிறார்கள் என்றவாறெல்லாம் எத்தனை புரளிகளைக் கிளப்பிவிட்டார்கள். இவ்வாறான புரளிகளில் ஊடகங்களின் பங்கே பிரதானமாக இருந்தது. இவ்வாறான புரளிகளைக் கிளப்பும் தமது செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள். தமது செய்திகளின் பொய்த்தன்மைகள் வெளியாகும்போது தமது பொய் முகங்களை மக்கள் இனங்கண்டு விடுவார்களே என்று இந்த கற்பனை ஊடகவியலாளர்கள் கொஞ்சம்கூட நினைப்பதில்லை. ஏனெனில், இவர்கள் மக்களுக்காக எதனையும் எழுதுவதில்லை. கேணல் சூசை தொடர்பாக தாம் வெளியிட்ட செய்திகள் பொய்யென்பது நிரூபிக்கப்பட்டு விட்டதால் இவர்கள் கவலையடையமாட்டார்கள். அடுத்ததாக யாரைப்பற்றி புரளி கிளப்பிவிடலாமென தற்போது தமது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டிருப்பார்கள். இதுதான் அவர்களின் ஊடக தர்மம்.
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் போர் தொடுத்துவரும் இலங்கை அரச பேரினவாதம் அண்மைக் காலமாக உளவியல் யுத்தத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது.

