நீண்ட காலத்தின் பின்னர் கடலில் மற்றொரு சமர் இடம்பெற்றிருக்கின்றது. யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் 26.12.2007 அன்று மதியம் 12.45 மணியளவில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடற்சமர் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கடற்சமரின் போது சிறீலங்காக் கடற்படையினரின் டோறா தாக்குதல் பீரங்கிப் படகு ஒன்று (dockyard built attack craft ) கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.மேலும் இரு டோறா பீரங்கிப் படகுகள் கடற்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி தேசமாக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவுப் பிரதேசத்தை நோக்கி விடுதலைப் புலிகளின் 17 சிறிய ரகப் படகுகள் அடங்கிய அணி ஒன்று செல்வதை அவதானித்த சிறிலங்கா கடற்படையினர், அந்த அணி மீது தாக்குதல் நடாத்த முற்பட்டபோதே, கடற் சமர் வெடித்ததாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளார்கள்.
சிறீலங்காக கடற்படையினரின் 6 டோறா பீரங்கிப் படகுகள் கொண்ட அணியினரும், நான்கு எம்.ஐ.24 உலங்கு வானுர்திகளும் இந்த சமரில் பங்குபற்றியதாக சிறிலங்கா படையினர் அறிவித்துள்ளார்கள். சிறிலங்கா கடற்படையினருக்கு ஆதரவாக மன்னாரிருந்தும், தீவகத்திலிருந்தும் சிறீலங்காப் படையினரால் எறிகணைச் சூட்டாதரவும் வழங்கப்பட்டன.
நடுக்கடல் ஒன்றில் இருந்து இறக்கப்பட்ட ஆயுதங்களை விடுதலைப் புலிகள், அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல் தீவுப் பிரதேசத்திற்கு கடத்த முற்பட்ட போதே அவர்கள் புலிகளின் படகுகள் மீது தாக்குதல் நடாத்தியதாக சிறிலங்கா தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மோதலில் சிறிலங்கா கடற்படையினர் தரப்பில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டதாகத் சிறிலங்கா படையினர் அறிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தரப்பில் நான்கு கரும் புலிகள் வீரமரணம் அடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பத்தி எழுதப்படும் வரைக்கும், இந்தக் கடற் சமர் பற்றி மேற்கூறப்பட்ட விடயங்கள் மட்டும்தான் வெளியாகியுள்ளன.
கடற் புலிகளின் பலம்:
இந்த கடற் சமர் பற்றி வெளியாகியுள்ள விடயங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது, சில உண்மைகளை எங்களால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. முதலாவது, சிறிலங்காக் கடற்படை மீது, விடுதலைப் புலிகள் வலிந்து தாக்குதலை நடாத்தவில்லை. ஏதோ காரியமாகப் பயணித்துக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையினரே வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வாங்கிக் கட்டியிருக்கின்றார்கள். தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் சிறிய ரகப் படகுகளே ஈடுபட்டிருந்தன என்று சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளார்கள். புலிகள் தமது இந்தச் சிறியரகப் படகுகளில் பீரங்கிகள் போன்ற கனரக ஆயுதங்களைப் பொருத்தியிருக்கச் சந்தரப்பம் இல்லை. இயந்திரத் துப்பாக்கிகள், அல்லது சிறிய ரக எறிகணைச் செலுத்திகள் மட்டுமே இந்தப் படகுகளில் இருப்பதற்கான சாத்தியதான்; உள்ளன. ஆனால் சிறிலங்காப் படையினர் தரப்பில் ஆறு நவீன டோராப் பீரங்கிப் படகுகள் தாக்குதலில் பங்கு பற்றியிருக்கின்றன. இந்தப் படகுகளில் பொலிகன் ரக பீரங்கிகள் உட்பட பல்வேறு பீரங்கிகளும், 50 முதல் 90 கலிபர் துப்பாக்கிகளும், குறி தவறாமல் தாக்கக் கூடிய எறிகணைகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் சிறிலங்கா வான்படையின் மூன்று எம்.ஐ. 24 ரக உலங்கு வானூர்திகளும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றன.
கடற் சமர் என்பது தரையில் இடம்பெறும் சமரைப் போன்ற ஒரு இலகுவான காரியம் கிடையாது. தரையில் நடைபெறும் சண்டைகளைப் போன்று, தரையில் விழுந்து படுத்தோ, அல்லது மறைவெடுத்தோ கடலில் தாக்குதல் நடாத்த முடியாது. மறைந்திருந்து கெரில்லாப் பாணியிலான தாக்குதல் என்கின்ற பேச்சுக்கே கடலில் இடம் இல்லை. எதிரியின் கலன்கள் எங்கெங்கு நிற்கின்றன, எத்தனை நிற்கின்றன, அதன் அளவு என்ன என்பனவறை எல்லாமே ராடர்கள் தெளிவாகக் காண்பித்து விடும். கடற் சண்டை என்பது நேருக்கு நேரான சண்டைகள்தான்.
அதுவும் குறிப்பாக, வானில் இருந்து தாக்குதல் நடைபெறும் பொழுது, அந்தத் தாக்குதலில் இருந்து தப்புவதென்பது மிக மிக கடினம். அதுவும், எம்.ஐ.24 ரக உலங்கு வானூர்தி என்பது, ஒரு பறக்கும் யுத்தத் தாங்கி. இப்படியான எதிரியின் நான்கு பறக்கும் யுத்தத் தாங்கிகள், மற்றும் ஆறு யுத்தக் கலங்கள் போன்றனவற்றிற்கு நடுவில் இருந்து தப்பித்துச் செல்வதென்பது இலகுவான காரியம் இல்லை.
ஆனால் விடுதலைப் புலிகளின் அந்தச் சிறிய படகுகளைக் கொண்ட அணி, இவை அனைத்தையும் சமாளித்துக் கொண்டது மாத்திரமல்ல, எதிரிக்குப் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சண்டையில் சிறிலங்காப் தரப்பில் கலந்துகொண்ட ஆறு டோரப் படகுகளில் மூன்றை, அதாவது அரைவாசிக் கலன்களை தாக்கியழித்துள்ளன. விடுதலைப் புலிகளின் படகு அணிகள் தன்னைத் தற்காத்துக்கொண்டு, எதிரிக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டு, பத்திரமாக தளம் திரும்பியுள்ளன. சிறிலங்கா படைத்துறையையும், உலகத்தையும் ஆச்சரியப்பட வைக்கின்ற விடயங்கள் இவைதான்.கடற் புலிகளின் அதி உச்சத் திறமையையும், அவர்கள் பற்றிய அச்சத்தையும் உலகிற்கு ஏற்படுத்துகின்ற விடயமும் இதுதான்.
ஆயுதங்கள் கடத்தப்பட்டதா?
இந்த கடற் சமர் விடயத்தில் மற்றொரு விடயத்தையும் நாம் பார்க்க வேண்டும். அதாவது, விடுதலைப் புலிகளின் சிறிய படகுகளைக் கொண்ட அணி சிறிலங்கா கடற்கலங்களைக் குறிவைத்து நகர்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. சிறிலங்கா கடற்படைதான் புலிகளின் படகுகள் அணி மீது தாக்குதலைத் தொடுத்திருந்தன. அப்படியானால் விடுதலைப் புலிகளின் அணிகள் என்ன காரணத்திற்காக அந்தப் பிராந்தியத்தில் அணி வகுத்துச் சென்றன?
புலிகளின் படகுகள் ஆயுதங்களைக் கடத்தியதாக சிறிலங்கா கடற்படை கூறுகின்றது. சிறிய படகுகளில் ஆயுதங்களைக் கடத்தவேண்டிய அவசியம் தற்பொழுது புலிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் சிறிய படகுகளில் கடத்தப்படக்கூடிய அளவு ஆயுதங்கள் என்பது தற்போதைக்கு புலிகளுக்கு தேவையில்லை. ரோலர் போன்ற கொஞ்சம் பெரிய கலங்களில் கடத்தப்படவேண்டிய கனரக அயுதங்கள்தான் புலிகளுக்குத் தேவை. எனவே அந்த சிறிய ரக படகுகளில் ஆயுதங்கள் கடத்தப்பட்டடிருப்பதற்கான சந்தரப்பங்கள் குறைவு என்றே கூறலாம்.அப்படியானால் அந்த கலங்கள் எப்படியான பணிக்காக அணிவகுத்துச் சென்றன?
இதில் இரண்டு முக்கிய விடயங்களை நாம் கவனிக்கவேண்டும்.
முதலாவது, விடுதலைப் புலிகளின் அந்த அணியில் கரும்புலிப் படகுகளும் இருந்திருக்கின்றன. முக்கிய பணிகளுக்காகச் செல்லும் படகுகளில் அணிகளில்தான் கரும்புலிப் படகுகள் செல்வது வழக்கம். அதனால் அந்தப் படகுகள் அணி ஒரு முக்கியமாக பணிக்கான அணி என்பதில் சந்தேகம் இல்லை.
இரண்டாவது, புலிகளின் படகுகள் அணி சென்றுகொண்டிருந்த திசை. புலிகளின் படகுகள் விடத்தல் தீவில் உள்ள தமது தளங்களை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதுதான் மோதல்கள் வெடித்ததாகக் கூறப்படுகின்றது. அதாவது விடுதலைப் புலிகளின் படகுகள் அணி, தமது ஒரு முக்கிய பணியை முடித்துக்கொண்டு திரும்பும்போதுதான் மோதல் இடம்பெற்றுள்ளது.
புலிகளின் படகுகள் அணி மேற்கொண்ட அந்த முக்கிய பணி என்ன? சிறிலங்காப் படைத்துறைத் தலைமையை தற்பொழுது தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்துள்ள கேள்வியும் இதுவாகத்தான் இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணி ஒன்றை தென் இலங்கையில் தரை இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கலன்களாக அவை இருக்கலாமோ என்று படைத் தரப்புக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது.
புலிகளின் தாக்குதல் தளபதிகளை ஒரு பாரிய தாக்குதல் நடவடிக்கைக்கான ‘பைனல்’ பார்பதற்காக அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த படகுகள் அணியாகவும் அது இருக்கலாம் என்று மற்றொரு சந்தேகம் சிறிலங்காப் படைத் தரப்புக்கு இருக்கின்றது.
ஆனாலும், புலிகளின் அந்த கடற்கலன்கள் அணி ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வந்த கலன்களாக இருக்கலாம் என்றுதான் சிறிலங்காப் படைத்துறைத் தலைமை உறுதியாக நம்புகின்றது. சிறிலங்காப் படைத்துறைத் தலைமையின் இந்த நம்பிக்கையில் சில யதார்த்தங்கள் இருக்கத்தான் செய்கின்றது.
ஆனால் ஒரு சிறிய திருத்தம். புலிகளின் அந்தப் படகுத் தொகுதி ஆயுதங்களை ஏற்றி வந்தன என்று கூறுவதை விட, ஆயுதங்களை ஏற்றிச் சென்ற பாரிய றோலர் கலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய பணியை மேற்கொண்டுவிட்டுத் திரும்பிய கலன்களாகவும் அவை இருக்கலாம் என்று கொழும்பில் உள்ள ஒரு முக்கிய போரியல் ஆய்வாளர் கருத்துத் தெரிவித்தார்.
ஏனெனில், கடற் சமர் இடம்பெற்ற தினத்தில் இலங்கையின் தென்கிழக்கிலுள்ள அறுகம்பை கடலில் ஒரு கப்பலை சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றியிருந்தார்கள்.
இந்தோனேசிய மாலுமிகள் 12 பேருடன் சென்றுகொண்டிருந்த அந்த கப்பல் பற்றிய தகவலை இந்தியக் கடற்படையினரே வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்தே அந்தக் கப்பலைச் சுற்றிவழைத்து சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றினார்கள்.
அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, அதனைக் கைப்பற்றும் முயற்சியில் சிறிலங்காக் கடற்படை இறங்கியிருந்தது.
ஆனால், சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றிய பொழுது அந்தக் கப்பல் வெறுமையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோனேசிய கப்பல் சிப்பந்திகளை கைதுசெய்த சிறிலங்கா கடற்படையினர் அவர்களைத் தடுத்துவைத்து விசாரணை செய்துவருகின்றார்கள்.இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து ஒரு பெரும் தொகுதி ஆயுதங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு அந்தக் கப்பல் திரும்பிக்கொண்டிருக்கலாம் என்று சிறிலங்கா படைத்தரப்பு உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.
நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கப்பலில் இருந்து அயுதங்களை றோலர்கள் போன்ற சற்றுப் பெரிய படகுகளில் இறக்கும் பொழுது அதற்குப் பாதுகாப்பாக கடற்புலிகளின் ஏராளமான படகுகள் அணி வகுத்து நிற்கும். கரும்புலிப் படகுகளும் பாதுகாப்பாக நிற்கும். றோலர்களில் ஏற்றப்பட்ட புலிகளின் ஆயுதங்கள் தரையிலுள்ள தளங்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது, அதற்கு முன்னாகவும் பின்னாகவும் ஏராளமாக படகுகளும், கரும்புலிப்படகுகளும் அணிவகுத்துச் செல்வது வழக்கம்.
அப்படி அணிவகுத்துச் சென்ற ஒரு அணியுடன்தான் சிறிலங்கா கடற்படையினர் கடந்த புதன் கிழமை மோதியிருக்கலாம் என்றும், சில இராணுவ வல்லுனர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றார்கள். ஆக மொத்தத்தில் கடந்த 26.12.2007 அன்று கடலில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது சில விடயங்கள்; தெளிவாகத் தெரிகின்றன.
- • விடுதலைப் புலிகளுக்கு ஒரு பெரும் தொகுதி ஆயுதம் வந்துள்ளது.
-
- • அந்த ஆயுதத் தொகுதி பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு விட்டது.
-
- • கடற் புலிகள் தற்காப்புத் தாக்குதலில் மாத்திரமே ஈடுபட்டு வருகின்றார்கள்.
- • சிறிய வளத்துடன் எதிரிக்கு பாரியசேதத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு கடலில் புலிகள் மிக மிக வல்லமையாக இருக்கின்றார்கள்.
- • விடுதலைப் புலிகளின் தரைத் தாக்குதல் அணிகள் போலவே கடற்புலிகளும் வீணான சண்டைகளில் ஈடுபடாமல் தங்களது பலத்தைத் தக்கவைத்தக்கொண்டு இருக்கின்றார்கள் - விரைவில் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் ஒரு பாரிய தாக்குதலுக்காக.
|