| இந்தியாவால் அதிகரிக்கும் ஆபத்து:போர்க்கொடி தூக்கியுள்ள ஜே.வி.பி. |
|
|
| நிலவரம் பத்திரிகைக்காக ஆதவன் | |
| 12. March 2008 00:31 | |
இந்தியாவின் செல்வாக்கு அல்லது ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நிலையில், ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பிலான அதன் அணுகுமுறையில் பாரிய மாற்றங்கள் எதுவும் அண்மைக் காலத்தில் நிகழ்ந்துவிடவில்லை. இருந்த போதிலும், சமீப காலம் வரையில் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துக்களையே வெளியிட்டுவந்த ஜே.வி.பி. இப்போது இந்திய எதிர்ப்புக் கொள்கையைத் திடீரென தூக்கிப் பிடித்து நாடுதழுவிய ரீதியிலான பிரச்சாரப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருப்பதற்குக் காரணம் என்ன?
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று - 13 வது திருத்தத்தை இனநெருக்கடிக்கான தீர்வாக அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழு முன்மொழிந்திருப்பது. இதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஜே.வி.பி. கருதுகின்றது. காரணம் 1887 இல் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே 13 வது திருத்தம் அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட்டது. இரண்டாவது காரணம் - இலங்கையின் பல பகுதிகளிலும் அதிகரித்துவரும் இந்தியாவின் வர்த்தக, பொருளாதார ஆதிக்கம். குறிப்பாக திருமலை எண்ணெய்க் குதங்களைப் பெற்றுக்கொண்டமை உட்பட அதுபோன்ற பல விடயங்களில் தொடரும் இந்திய நலன்சார்ந்த ஆதிக்கம். இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை ஜே.வி.பி. இப்போது ஆரம்பித்திருக்கின்றது. அண்மையில், அநுராதபுரத்தில் பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்திய ஜே.வி.பி. தொடர்ந்து கண்டி, காலி, கொழும்பு என நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்திய எதிர்ப்பு அலையைப் பரப்பத் திட்டமிட்டுள்ளது. ஜே.வி.பி.யினரின் இந்த இந்திய எதிர்ப்புப் போராட்டம் 1989 - 90 காலப்பகுதியில் அவர்கள் மேற்கொண்ட இரண்டாவது கிளர்ச்சியை தவிர்க்க முடியாமல் நினைவுபடுத்துவதாகவே இருக்கின்றது. ஒரு கிளர்ச்சி அமைப்பாக ஆரம்பித்து இப்போது ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்துள்ள ஜே.வி.பி.யின் இந்தியா தொடர்பான அடிப்படைக் கொள்கை என்ன என்பதையும் அது எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்துள்ளதென்பதையும் சற்றுப் ஆய்வது இச் சந்தர்ப்பத்தில் அவசியமானது. ஜே.வி.பி.யின் தற்போதைய நிலைப்பாடானது நிரந்தரமானதா அல்லது ஒரு சலசலப்புடன் அது ஓய்ந்துவிடுமா என்பதைப் புரிந்துகொள்ள இது அவசியம். இந்திய எதிர்ப்பு வாதம்" என்பது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கோட்பாடுகளில் முக்கியமானது. நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இரண்டு கிளர்ச்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்டது. முதலாவது கிளர்ச்சி 1971 இலும் இரண்டாவது கிளர்ச்சி 1989 -90 காலப்பகுதியிலும் நடைபெற்றது. இந்தக் கிளர்ச்சிகளுக்கான தயாரிப்பில் ஜே.வி.பி.யினர் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கான இரகசிய வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இந்த இரகசிய வகுப்புக்களில் ஐந்து பாடங்களே அவர்களுக்குப் போதிக்கப்பட்டது. இதில் ஒன்றுதான் 'இந்திய விஸ்தரிப்பு வாதம்" என்பதாகும். இலங்கையை ஆக்கிரமிப்பதுதான் இந்திய வெளிவிவகாரக் கொள்கையின் முக்கியமான அம்சம் என இந்த வகுப்புக்களில் விளக்கப்பட்டது. அதற்கெதிராக அணிதிரள வேண்டியதன் அவசியத்தை ஜே.வி.பி. வலியுறுத்தியது. இதன் மூலம் சிங்களக் கடும்போக்காளர் மத்தியில் இந்தியா தொடர்பிலான அச்சம் ஒன்று வளர்க்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆரம்ப காலத்தில் இந்தியா வழங்கிய ஆதரவையும் இந்தப் பின்னணியிலேயே சிங்;களவர்கள் நோக்கினார்கள். அதேவேளையில் இவ்விடத்தில் மற்றொரு முக்கியமான விடயத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம். 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியாவின் இராணுவ உதவியையே பெற்றிருந்தார். அதேபோல 1989 - 90 களில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சியை அடக்குவதற்கும் இந்தியப் படையே துணையாக இருந்தது. இக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் இந்தியப் படை நிலை கொண்டிருந்தமையால்தான் தனது படைப் பலத்தை முழுமையாக ஜே.வி.பி.க்கு எதிராக அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸவினால் பிரயோகிக்க முடிந்தது. ஜே.வி.வி.யின் இரண்டாவது கிளர்ச்சிக்கு இந்திய எதிர்ப்பு என்பதே பிரதான தொனிப்பொருளாக இருந்தது. வட, கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்தியப் படை தொடர்பான அச்சத்தைச் சிங்களவர்கள் மத்தியில் உருவாக்குவதன் மூலமாகவே கிளர்ச்சிக்கான ஆதரவை ஜே.வி.பி. சிங்களவர்களிடம் பெற முனைந்தது. அதற்கு ஈடுகொடுப்பதற்காகத்தான் தான் பதவிக்கு வந்தால் இந்தியப் படை வெளியேற்றப்படும் என்ற வாக்குறுதியுடன் 1889 தேர்தலை பிரேமதாஸ சந்தித்தார். இந்திய எதிர்ப்பு என்பது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கையாக இருந்துள்ள போதிலும், 2000 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் அந்தக் கொள்கையில் ஒரு தளர்வையே ஜே.வி.பி. வெளிப்படுத்தியது. இந்தியப் பொருட்களை வீதிகளில் போட்டு எரித்த ஜே.வி.பி. யினர் இந்தியக் கார்களில் செல்வதைப் பெருமையாகக் கருதும் நிலையை 2000 ஆம் ஆண்டின் பின்னர் எம்மால் நேரில் காணமுடிந்தது. அத்துடன் இந்தியாவே எமது நெருங்கிய நண்பன் எனவும், மேற்கு நாடுகளின் மத்தியஸ்தத்தைக் கைவிட்டு இந்தியாவின் அநுசரணையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜே.வி.பி. தெரிவித்தது. ஜே.வி.யி.யின் இந்தக் கொள்கை மாற்றத்துக்கு ஈழப் பிரச்சினை தொடர்பிலான இந்திய அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் காரணம். 1990 களின் நடுப்பகுதியில் ஈழப் பிரச்சினை தொடர்பிலான இந்தியாவின் அணுகுமுறையில் முக்கிய மாற்றங்கள் நிழந்தன. இரண்டு நிகழ்வுகள் இந்த மாற்றத்துக்கு அடிப்படையாக இருந்தன. ஒன்று - இந்தியப் படையினருடைய அவமானகரமான வெளியேற்றம். தன்னுடைய பணியைப் பூர்த்தி செய்யாமல் பல துருப்புக்களை இழந்து இந்தியப் படை வெளியேற விடுதலைப் புலிகளே காரணம் என டில்லி கருதியது. இரண்டாவது - ராஜீவ் காந்தியின் படுகொலை. இதற்கும் புலிகளே காரணம் என இந்தியா குற்றஞ்சாட்டியது. இதன் தொடர்ச்சியாகவே ஈழப்பிரச்சினை தொடர்பான இந்திய அணுகுமுறையில் வெளிப்படையான மாற்றங்களைக் காண முடிந்தது. முதலாதாக விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த நாட்டில் தடை செய்யப்பட்டது. இரண்டாவதாக, தமிழர்களுடைய அபிலாஷைகளை நிறைவு செய்வதாக எந்தத் தீர்வும் அமைந்திருக்க வேண்டும் என அதுவரையில் அழுத்தம் கொடுத்துவந்த டில்லி, அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளையும் கவனத்திற் கொள்வதாக எந்தத் தீர்வும் அமைய வேண்டும் என தனது நிலைப்பாட்டைத் 'திருத்திக்கொண்டது"! இதன்மூலம் இந்தியா தெரிவித்த செய்தி முக்கியமானது. அது வரையில் தமிழர்களுக்கு ஆதரவானதெனக் கருதப்பட்ட இந்தியா, இதன் மூலம் சிங்களத்துடன் நெருங்கிவரும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. எனது எதிரியின் எதிரி எனக்கு எண்பன் என்பதற்கிணங்க விடுதலைப் புலிகளின் எதிரியாகக் கணிக்கப்பட்ட இந்தியா, கொழும்பின் நண்பனாகியது. அதேவேளையில் இலங்கை மண்ணில் தனது நலன்களைப் பெற்றுக்கொள்ள இனவாதக் கட்சிகளை தனது செல்வாக்குக்குள் கொண்டுவருவதை அவசியம் என உணர்ந்த இந்தியா, ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. என்பவற்றுடன் நட்புறவைப் பலப்படுத்திக் கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அதன் கேந்திர முக்கியத்துவம் மற்றும், பொருளாதார நலன்களின் அடிப்படையிலேயே அதன் இலங்கை தொடர்பிலான அணுகுமுறை அமைந்திருந்தது. விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இடம்பெறும் அதேவேளையில் சிங்களத்துடன் இந்தியா ஏற்படுத்திக்கொண்ட புதிய உறவுகள் இலங்கையில் இந்தியாவுக்கு அதிகளவு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தது. இந்தியா தொடர்பிலான சந்தேகங்கள் தென்னிலங்கை சிங்களக் கடும் போக்குச் சக்திகளிடம் காணாமல் போயிருந்தமை இந்தியாவின் நோக்கங்களுக்குத் துணைபோனது. இந்திய எண்ணைக் கூட்டுத்தாபனம், ஏற்கனவே இலங்கையில் பலமாகக் கால்களைப் பதித்திருக்கின்றது. இதன் மூலம் இலங்கையில் எரிபொருள்; நிரப்பு நிலையங்கள் பல இலங்கையில் அமைக்கப் பட்டிருக்கின்றன. இதனைவிட திருமலை, நிலாவெளிக்கு அருகாமையில் எரிசக்தி நிலையம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கான உடன்படிக்கை ஒன்றை இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்டிருக்கின்றது. இதற்கும் மேலாக இலங்கை மின்சார சபைக்கு இந்திய எண்ணைக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களை வழங்கவுள்ளது. இவை அனைத்தும் திருமலையில் இந்தியாவின் பிரசன்னம் பெருமளவுக்கு அதிகரிப்பதற்கு வழிவகுப்பதாகவே அமைந்திருக்கும். ஏற்கனவே திருமலை சீனன்குடா பகுதியிலுள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவால் குத்தகைக்கு எடுக்கப் பட்டிருக்கின்றது. இப்போது திருமலையை மையப்படுத்தியதாக மேலும் பல வசதிகளை இந்தியாவுக்கு வழங்குவது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் துறைமுக நகரம் இந்தியாவின் முழுமையான செல்வாக்குக்குள் வருவதைத் தடுக்க முடியாமல் போய்விடும். இவற்றைவிட இந்தியாவிலிருந்து மன்னாருக்கு குழாய் மூலமாக எண்ணெய் கொண்டு வருவதற்கான திட்டம் ஒன்று தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் டில்லி சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ இவை தொடர்பாக முக்கியமாக ஆராய்ந்ததாக பத்திரிகைச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இதன் தொடர்ச்சியாக இந்திய உயர்மட்டக்குழு ஒன்று கொழும்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக வரவுள்ளது. இந்தப் பேச்சுக்களும் வெற்றிபெற்றால் இலங்கையின் பொருளாதாரம் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பது உண்மை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியாவின் கடுமையான அணுகுமுறை காரணமாக, இந்தியாவின் திட்டங்கள் அனைத்துக்கும் அனுமதியளித்துக் கொண்டிருந்த ஜே.வி.பி. இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கின்றது. “இந்தியாவின் அதிகரித்துவரும் ஆதிக்கத்தால் உருவாகும் புதிய ஆபத்து” தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டுவதற்கான கூட்டங்களை ஜே.வி.பி. ஆரம்பித்திருக்கின்றது. கடந்தவாரம் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் அரசியல் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதன்படி அநுராதபுரத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் உரையாற்றிய சோமவன்ச அமரசிங்க, ‘இலங்கையில் உள்விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு தொடர்ந்தும் அதிகரிக்குமாயின் இந்தியப் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு அழைப்புவிடும் நிலை கூட வரலாம்’ என எச்சரிக்கை விடுத்தார். அதாவது, 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியை நோக்கி தாம் செல்லத் தயாராகவிருப்பதையே சோமவன்ச இங்கு உணர்த்தியிருக்கின்றார். இந்த இடத்தில் எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியா முக்கிய பங்காற்றி வரும் நிலையில் ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துமா என்பதே. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் அதன் கொள்கைகளில் இன்று முதலாவதாக இருப்பது ‘யுத்தம்’ தான். ஆக, இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை ஒரு அளவுக்கு மேல் கொண்டு செல்ல ஜே.வி.பி. முற்படாது என்றே விமர்சகர்கள் கருதுகின்றார்கள். ஆனால், ஜே.வி.பி.க்கு நெருடலைக் கொடுக்கும் விடயமாக இருப்பது 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு இந்தியத் தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தம் மட்டும்தான். நிலைமைகளைப் பயன்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தில் இந்தியாவின் அதிகரித்துவரும் ஆதிக்கத்தைக் கூட ஜே.வி.பி. பொறுத்துக் கொள்ளும். இந்தியாவின் இவ்வாறான பொருளாதார ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜே.வி.பி. குரல் கொடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. யுத்த முனைப்புக்களுக்கு இந்தியா வழங்கும் ஆதரவுக்கான பிரதியுபகாரமாக அதனை விட்டுக்கொடுக்க ஜே.வி.பி. தயாராகவே உள்ளது. ஆனால், இந்தியா தமிழர்களுக்குச் சார்பானது எனக் கருதப்படும் மாகாண சபைக்கு அழுத்தங் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள ஜே.வி.பி. தயாராகவில்லை. அந்த வகையில் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சமிக்ஞையாகவே ஜே.வி.பி.யினரின் இந்தப் போராட்டத்தைக் கருதலாம். ஒரு சலசலப்பை மட்டும் ஏற்படுத்திவிட்டு இது ஓய்ந்துவிடும் என்பதே உண்மை! கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




இந்தியாவின் செல்வாக்கு அல்லது ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நிலையில், ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பிலான அதன் அணுகுமுறையில் பாரிய மாற்றங்கள் எதுவும் அண்மைக் காலத்தில் நிகழ்ந்துவிடவில்லை. இருந்த போதிலும், சமீப காலம் வரையில் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துக்களையே வெளியிட்டுவந்த ஜே.வி.பி. இப்போது இந்திய எதிர்ப்புக் கொள்கையைத் திடீரென தூக்கிப் பிடித்து நாடுதழுவிய ரீதியிலான பிரச்சாரப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருப்பதற்குக் காரணம் என்ன?

