| மாமனிதர் சிவநேசன் உயிர்தந்து உணர்த்தியதை உலகத்தமிழர் புரிந்து பணிசெய்யவேண்டும் |
|
|
| மதி | |
| 23. March 2008 01:31 | |
மாமனிதர் சிவநேசன்
சிறீலங்கா அரசும் அதன் படைக்கட்டமைப்பும் புலனாய்வாளர்களும், இது விடயத்தில் அதாவது இந்தப் படுகொலையை புலிகளின் தலையில் போடலாமென்று தாம் நினைத்த விடயத்தை செய்யமுடியவில்லை. படுகொலை நடந்து சில மணிநேரத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒருவித தடுமாற்றம் இருந்தது உண்மை தான். அதற்கான காரணம் தாக்குதல் நடந்த இடம். ஆனாலும்... படுகொலையை புலிகளின் தலையில் போட நினைத்த விடயத்தில் சிறீலங்காப் புலனாய்வாளர்கள் தோற்றுதான் போனார்கள்... என்பதையும், எவ்வளவு இறுக்கமான அச்சுறுத்தலான சூழ்நிலையில் சிவநேசன் பணிபுரிந்தார் என்பதனையும் நாமிங்கு பார்ப்போம்.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மரபு வழிப் படைக்கட்டுமானங்களை தமிழ்ப்படை என்ற நிலைக்கு உயர்த்தி படைவலுச் சமநிலையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் புதிய தாக்குதல் வடிவமாகத் தான் ஆழ ஊடுருவும் படையணி பற்றிப் பேசப்படுகிறது. இதில் நாமனைவரும் கவனிக்கதக்க ஒரு விடயம் ஆழஊடுருவி தாக்குதல் ஒன்றை நடத்துவதில் பார்க்கவும் அதனை தடுப்பது மிவும் கடினமான விடயமாகும். புலிகளைப் பொறுத்தவரை ஆழஊடுருவும் விடயத்தில் நுட்பமான பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் சொல்லக்கூடியதாக இருப்பது தீவகத்தில் வைத்து இலக்காக்கப்பட்ட படைதளபதி டென்சில் கொப்கேக்கடுவ தொடக்கம் அண்மையில் மொனராகலைத் தாக்குதல் வரை நீண்ட பட்டியல் உள்ளது. புலிகளின் ஆழ ஊடுருவும் படையணியினர் தெற்கில் சிறீலங்காப் படையினருக்கு பெரும் சவாலாக இருப்பதை தடுக்க வழியின்றி திணறுவது போலொரு திண்டாட்டம் புலிகளுக்கில்லை என்றாலும் புலிகளின் பகுதிக்குள் ஆழ ஊடுருகின்றவர்களை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டிய பொறுப்பு புலிகளிற்கேயுள்ளது.
இன்று புலிகளின் ஆளுகைக்குளான வன்னிப் பெருநிலப்பரப்பின் எல்லைப்புறம் காடுகளையும், பெருங்கடலையும் கொண்டுள்ளன. பூனகரி தொடக்கம் மன்னார் வரை பெருங்கடல், நாகர்கோவில் தொடக்கம் நாயாறு வரை பெருங்கடல், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் முன்னரங்க பாதுகாப்பரண்கள் உள்ளடங்கலாக அனைத்து எல்லைப் பிரதேசங்களும் அதாவது மன்னார் தொடக்கம் மணலாறுவரை பெருங்காடுகளும் ஆள்நடமாட்டம் அற்ற பிரதேசங்களுமாகவுமே உள்ளன.
கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையான பிரதேசம் முற்றிலும் மாறாக இறுக்கமான இருதரப்பு முன்னரங்க காப்பரண்களை கொண்டதாகவுள்ளன. எனவே கடல், பெருங்காடு போன்றவற்றினூடாக புலிகளின் பகுதிக்குள் ஊடுருவும் ஆழ ஊடுருவும் படையணியினரை கண்காணிக்க புலிகளின் படையணிகள் கடமைக்கமர்த்தப்பட்டிருந்த போதும் ஆழ ஊடுருவும் படையணி ஊடுருவுவதை முற்றுமுழுதாக இன்றளவிலும் தடுத்துவிட முடியவில்லை.
சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணி வெளிநாடுகளில் படைவல்லுனர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களையும், தமிழீழம் கேட்டு முன்பு போராளிகளாகவிருந்து தன்போது தன்னினத்தின் குருதி சுவைப்பவர்களாக இருப்பவர்களையும், கொக்காவில், மாங்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆனையிறவு, போன்ற இடங்களில் புலிகளால் அழிக்கப்பட்ட படைமுகாம்களில் முன்பு கடமையில் இருந்த படையாட்களையும், இன்னும் சில விலைபோன சில தமிழர்களையும் கொண்டதாக உள்ளது. எனவே இப்படியானவர்களை கொண்ட ஆழ ஊடுருவும் படையணி நீண்டதூரம் ஊடுருவிச் செல்வதென்பது உலக அதிசயம் கிடையாது.
எது எப்படியான போதும் மக்களின் வேண்டுகை இதனை முற்றாகக் கட்டுபடுத்த வேண்டும் என்பதேயாகும். மக்களின் வேண்டுகை தவறில்லை என்பதை புலிகளும் உணர்வார்கள். எனவே எதிரியின் ஆழ ஊடுருவும் படையணியை கட்டுபடுத்துவதற்கான படையணியை வலுக்கொண்டதாக்க முயன்று வருவது இன்றைய களநிலமையினை அவதானிக்கின்றபோது புரிகிறது.
புலிகள் மீது பழியைப் போடக் கூடிய வகையில் தாக்குதலைச் செய்தவர்களின் உள்நோக்கம் இந்த மாதிரியான ஒழுங்கமைப்பில் தான் ஆழ ஊடுருவி நடத்தப்பட்டது என்பதனை ஆராய்கின்றபோது யார் இதனைச் செய்தார்கள் எனத் தெரிகின்றது. இதனை நாம் இன்னுமொரு விதமாகவும் நோக்கலாம். தமீழீழ விடுதலைப் புலிகளையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் சரியாக அவதானிக்கின்றவர்களிற்கு இந்த உண்மை தெரியும். இந்த விடயத்தை சிவநேசனின் தமிழ் தேசிய உணர்வுடனான செயற்பாட்டின் மூலமே நாம் நோக்க வேண்டும். யாழ்பாணம் கரவெட்டி கிழக்கு யாக்கரை கிராமத்தை சொந்த இடமாகக் கொண்ட சிவநேசன் இளம்பராயம் தொடக்கமே தமிழ்தேசிய உணர்வுடனும்ர உழைப்பாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவராகவும் இருந்து வந்துள்ளார். 1995 ம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது சூரியக்கதிர் ஒன்று, இரண்டு ஆகிய நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணத்தை சிங்களப்படைகள் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையைச் செய்தபோது யாழ்பாணத்தை விட்டு வெளியேறி வன்னிக்குள் வாழ்ந்து வந்தவர். தமிழீழப் போராட்டம் வெல்ல வேண்டும் அதன் மூலம் மட்டுமே ஈழத்தமிழர் நிம்மதியாக வாழ முடியும் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தவராவார்.
19.08.2007 அன்று கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் சிவநேசனில் செவ்வியொன்று வந்தது. அந்தச் செவ்வியில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டார் ஈழத்தமிழர் பிரச்சனை இலகுவாக தீர்ந்து விடும் என வலியுறுத்தியிருந்தார். அவரின் இந்தக் கருத்து நியாயமானது. தொடர்ந்தும் ஈழத்தமிழர் அனைவரும் வலியுறுத்தவேண்டியது காலத்தின் தேவையானதென்பதுடன். மாற்றுக்கருத்தின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியதொன்றாகவே தெரிகிறது.
சிவநேசனின் தமிழ்த்தேசிய உணர்வுச் செயற்பாடுகளும் நீண்ட பட்டியலிடக் கூடியவொன்றுதான். அர்பணிப்போடு உயிர் அச்சுறுத்தலுடன் பணியாற்றிய அவர் இன்று அவரின் உயிரையும் அர்பணித்து அவர் சொல்லிச் சென்ற செய்தி ஈழத்தமிழனத்னின் உயிர்களைப் பறிப்பதன் மூலம் தமிழீழம் கிடைப்பதை எவராலும் தடுத்து விட முடியாது என்பதேயாகும்.
ஆய்வு முரசத்திற்காக மதி
சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழரை கருவழிப்பதில் கங்கணம் கட்டி நிற்கிறது. நாலாபுறமும் போரைத் தீவிரப்படுத்திக் கொண்டு மறுபுறத்தில் பேரினவாதிகளின் சார்பாக நிற்க்க் கூடிய, எலும்புத்துண்டிற்கு வாலாட்டும் அரசியல்வாதிகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என உலகின் முன் காட்டிவிடலாமென எண்ணியே தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழிப்பதில் தீவிரமாகச் செயற்படுகின்றது.
முழுநேரப் போராளிகளை ஓய்வில்லாமல் களமுனைக்கிழுத்து அழிப்பது தமிழ்தேசிய உணர்வாளர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது அழிப்பது என்ற உபாயத்தை செய்துவரும் பேரினவாதிகள் மாறிமாறி புதிய வழிமுறைகளை கையாண்டுவருவதன் விளைவே சிவநேசன் போன்றவர்களின் இழப்புமாகும்.
இந்த புதிய வழிமுறை என்று கூறுகையில் அதென்ன புதிய வழியென்று கேள்வியெழுவது நியாயமானது. ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று விளங்கிக் கொள்ளுங்கள், என்றதன் அடிபடையில் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிடலாமென எண்ணுகின்றேன். சிறீலங்காப் படையினரின் பிரதேசத்திற்குள் கிளைமோர் தாக்குதல் நடத்தப் பட்டால் அதில் ஐந்து படையினர் பலியாகிவிட்டால் பதிலுக்கு ஐந்து தமிழரைக் கொன்று விடுவதாகவே அவர்களின் புதிய வேலைத்திட்டத்தில் ஒன்றாகவுள்ளது.
சிவநேசனும் எழுச்சியையும், துணிவையும் தந்துவிட்டே சென்றுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பல முக்கியஸ்தர்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாமனிதர் சிவநேசனின் உடலத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இப்படியானவர்களின் உயிர்த்தியாகங்களும் “தமிழீழம்” உருவாவதற்கான உரமிடலாகத்தான் அமைகிறது.
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






