| மடு மாதாவும் இடப்பெயர்வும் |
|
|
| ஆக்கம்: நிலவரம் பத்திரிகை | |
| 16. ஏப்ரல் 2008 06:41 | |
ஈழத் தமிழ் மக்களின் தொடரும் அவலங்களில் அவர்கள் பல்வேறு துன்ப துயரங்களைப் பல்வேறு காலகட்டங்களில் தனித்தனியாகவும் ஒட்டு மொத்தமாகவும் அனுபவித்து வந்திருக்கின்றார்கள். கைதுகள், கடத்தல்கள், துன்புறுத்தல்கள், உதாசீனங்கள், பரிகசிப்புகள், சித்திரவதைகள், வல்லுறவுகள், கொலைகள், இடப்பெயர்வுகள், சொத்தழிப்புகள் என அவை அனுபவித்தவை ஏராளம். தமிழ் மக்களின் உளவுரணைக் குலைத்து, அவர்கள் சிங்களத்தின் காலடியில் வீழ்ந்து கிடந்து, கையேந்திப் பிச்சை கேட்பவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கும் சிங்கள ஆளும் குழுமம் திட்டமிட்டு நடாத்தும் இத்தகைய இனச் சத்திகரிப்பு நடவடிக்கைகள் தசாப்தங்களாக கேட்பாரற்றுத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இன்றைய நிலையில் தமிழர் தாயகத்தில் வாழும் மக்களில் எவராவது வாழ்நாழில் ஒரு தடவையேனும் இடம் பெயராதவராக இருப்பாரானால் அது அதிசயமாகவே கொள்ளப்பட வேண்டும். அந்த அளவிற்கு தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் பந்தாடப் பட்டுள்ளனர். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தில் மூன்றிலொரு வீதத்தினர் இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து ஏதிலிகளாக அல்லலுறுகின்றனர்.
தமிழ் மக்கள் இத்தகைய துயரங்களை அனுபவிக்கும் வேளைகளில் எல்லாம், 'இந்தக் கடவுளுக்குக் கண் இல்லையா?" என வயிறெரிந்து கேட்போரிடம், 'பிரச்சினைகளைத் தாங்க முடியாமல் கடவுள் குடியெழும்பிப் போட்டார்." என சிலர் நகைச்சுவையாகப் பதில் கூறுவதுண்டு. அந்த நகைச்சுவை இன்று மடு அன்னையின் இடப் பெயர்வுடன் உண்மையாகி விட்டது. ஆம். 400 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறைக் கொண்ட மடுத் திருப்பதியில் இருந்த கன்னி மரியாளின் திருச் சொரூபம் தற்போது முழங்காவில் பிரதேசத்தில் மன்னார்-பூனகரி வீதியில் உள்ள தேவன்பிட்டியில் அமைந்துள்ள புனித சவேரியர் ஆலயத்தில் தற்போது வைக்கப் பட்டுள்ளது. மடு மாதா இடம் பெயர்வது இதுவொன்றும் முதற் தடவையல்ல. மன்னார்-மாந்தையில் முதன் முதலில் குடி கொண்ட அன்னை, ஒல்லாந்தர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து கத்தோலிக்க மதத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டபோதில் ஒரு தடவை பாதுகாப்பான இடம் என அப்போது கருதப்பட்ட மடுக் காடுகளுக்குள் தஞ்சமடைந்தாள். தஞ்சமடைந்து தன்னைக் காத்துக் கொண்ட அன்னை அத்தோடு நின்றுவிடாமல், தான் இடம் பெயரும் அன்றைய நாள் வரை தன்னை நாடி வந்த அனைவருக்கும் இன, மத பேதமின்றி அபயமளித்தாள். அன்னியரின் கரங்களில் சிக்கிக் கொண்டு தனது தன்மானத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் திடமாக உள்ள அன்னை மீண்டுமொரு முறை இடம் பெயர்ந்ததற்கும் அதுவே காரணமாகி விட்டது. இன்று மடுப் பிரதேசத்தைக் கைப்பற்ற சிங்கள ஆயதப் படைகள் எடுத்து வரும் முயற்சி வெறுமனே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்றுவது என்ற இலக்கை மாத்திரம் கொண்டதல்ல. அதன் உள்நோக்கம் கத்தோலிக்கர்களின் முக்கிய தலமாகக் கருதப்படும் மடுத் திருப்பதியைக் கைப்பற்றி வேகமாகச் சரிந்துவரும் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதும், கிறிஸ்தவர்;களுக்கு எதிரான மனோபாவம் பௌத்தர்களிடையே அதிகரித்து வருவதாக உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள விமர்சனங்களைத் தடுத்து விடுவதுமாகும். இத்தோடு இன்னுமொரு மறைமுகக் காரணமும் உண்டு. மடுமாதா கத்தோலிக்கர்களின் அடையாளமாக மட்டுமன்றி, தமிழர்களின் அடையாளமாகவும் விளங்குகின்றாள். தமிழர்களின் அடையாளம் என எதுவுமே இலங்கைத் தீவில் இருக்கக் கூடாது என விரும்பும் சிங்கள இனவாதம், மடுமாதாவின் தமிழின அடையாளத்தையும் அழித்துவிட அல்லது சிதைத்துவிட முயல்கிறது. ஏற்கனவே, தமிழர்களின் தொன்மையான அடையாளங்களுள் ஒன்றான கதிர்காமம், கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் போன்றவை சிங்களமயப் படுத்தப் பட்டுள்ளன. நீர்கொழும்பில் காலங்காலமாக வாழ்ந்த தமிழ் மக்களிடம் அவர்களின் பெயர்களைத் தவிர இன்று வேறு தமிழ் அடையாளம் இல்லை. இவை திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். மடு அன்னையின் திருச்சொரூபம் இராணுவக் கட்டுப் பாட்டில் உள்ள பிரதேசம் ஒன்றுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தால் சிங்களம் அதனை அரசியல் மயப்படுத்தி பாரிய வெற்றி விழாவாகவே கொண்டாடியிருக்கும். ~பாதுகாப்பு| எனக் காரணம் காட்டப்பட்டு சிங்கள இடமொன்றுக்குக் கொண்டு செல்லப்படும் அன்னை சிறிது கால இடைவெளியின் பின் சிங்களத்தில் பிரசங்கத்தைக் கேட்க வேண்டியிருந்திருக்கும். மிகுந்த தீரக்க தரிசனத்துடன் எடுக்கப்பட்ட இந்த முடிவிற்காக மன்னார் ஆயர் ஆண்டகை இராயப்பு யோசப் உட்பட உதவியாளர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெnனில், அவர்கள் இந்த முடிவினூடாக ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வயிற்றில் மட்டுமன்றி மடு மாதாவின் வயிற்றிலும் கூடப் பாலை வார்த்திருக்கின்றார்கள். அவர்கள் மாதாவை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை இந்த முடிவு வெளிப்படுத்தி நிற்கிறது. மாதா உயிர்த்தெழுந்து வந்திருந்தால் கூட இதே முடிவைத்தான் எடுத்திருப்பார். ஏனெnனில், 'சிங்கத்தின் வாலாய் இருப்பதை விட சிற்றெறும்பின் தலையாய் இருப்பதையே" மடுமாதா நிச்சயம் விரும்புவார். நன்றி;நிலவரம் பத்திரிகை கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|


ஈழத் தமிழ் மக்களின் தொடரும் அவலங்களில் அவர்கள் பல்வேறு துன்ப துயரங்களைப் பல்வேறு காலகட்டங்களில் தனித்தனியாகவும் ஒட்டு மொத்தமாகவும் அனுபவித்து வந்திருக்கின்றார்கள். கைதுகள், கடத்தல்கள், துன்புறுத்தல்கள், உதாசீனங்கள், பரிகசிப்புகள், சித்திரவதைகள், வல்லுறவுகள், கொலைகள், இடப்பெயர்வுகள், சொத்தழிப்புகள் என அவை அனுபவித்தவை ஏராளம். தமிழ் மக்களின் உளவுரணைக் குலைத்து, அவர்கள் சிங்களத்தின் காலடியில் வீழ்ந்து கிடந்து, கையேந்திப் பிச்சை கேட்பவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கும் சிங்கள ஆளும் குழுமம் திட்டமிட்டு நடாத்தும் இத்தகைய இனச் சத்திகரிப்பு நடவடிக்கைகள் தசாப்தங்களாக கேட்பாரற்றுத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.



