| திருமலை உள்துறைமுக வீதியில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலகம் |
|
|
| வா.கி.குமார் | |
| 11. May 2008 20:16 | |
|
மக்களால் தெரிவு செய்யப்படும் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலகம், மக்கள் மன்ற (அசெம்பிளி) மண்டபம் ஆகியன திருகோணமலை,உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள பிரதம செயலகக் கட்டிடத்திலேயே அமையவிருக்கின்றது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலகமாக இருந்த இம்மூன்று மாடிக் கட்டிடம், இரு மாகாணங்களும் தனித்தனியாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி பிரிக்கப்பட்ட பின்னர், தற்போது கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலகமாகவும் இது அமைகிறது. புதிய மாகாண சபையின் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அமைச்சுகளின் அலுவலகங்கள், தவிசாளர் பணிமனை எல்லாம் இங்கு அமையும். மக்கள் மன்ற (அசெம்பிளி) மண்டபம், 37 உறுப்பினர்களுக்கான இருக்கை, சுமார் 40 பேர் இருக்கக் கூடிய பொது மக்கள் கலரி, பத்திரிகையாளர்களுக்கு என தனியான இருக்கை, சமகால மொழிபெயர்ப்பு வசதிகள், ஒலி, ஒளி வசதிகள் கொண்டதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக வி.பி. பாலசிங்கம் பணிபுரிகின்றார். கிழக்கு மாகாண சபையின் மக்கள் மன்ற (அசெம்பிளி) த்தின் செயலாளராக இ.தியாகலிங்கமும் அவரின் பிரதிச் செயலாளராக எஸ்.நடராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகம், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு, மூன்று வாரங்களில் பதவி ஏற்கக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக பிரதம செயலாளர் பாலசிங்கம் தெரிவித்தார். பிரதம செயலாளராகப் பதவி ஏற்பதற்கு முன்னர் பாலசிங்கம் கிழக்கு மாகாண புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சின் செயலாளர், மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளராக 1989 தொடக்கம் 2001 வரை பணியாற்றினார். இலங்கை நிர்வாக சேவையில் 1979 இல் சேர்ந்தார். மாகாண அசெம்பிளியின் செயலாளராகப் பதவி ஏற்றுள்ள இ.தியாகலிங்கம் குறுகிய காலம் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராகப் பணிபுரிந்தார். அதற்கு முன்பு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், காணி மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் பதவிகளை வகித்தார். அசெம்பிளியின் பிரதிச் செயலாளரான எஸ்.நடராஜா முன்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல்கள் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்தார். கடைசியாக கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளராகக் கடமையாற்றினார். கிழக்கு மாகாண சபையின் மக்கள் மன்றம் (அசெம்பிளி) எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி செயலாளர் தியாகலிங்கம் வயாம்பா மாகாண சபையின் அசெம்பிளிக் கட்டிடத்தை நேரிற் சென்று பார்வையிட்டார். பிரதிச் செயலாளர் நடராசா சப்ரகமுவ மாகாண சபையின் அசெம்பிளிக் கட்டிடத்தைப் பார்வையிட்டார். இருக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு, கிழக்கு மாகாண சபையின் மக்கள் (அசெம்பிளி)மன்றத்தை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்கான ஆளணி 260 வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|








