|
அரசாங்கத்தின் கொள்கைகளை கிழக்கு மக்கள் ஏற்றுள்ளனர்- ஜனாதிபதி |
|
|
|
ஆக்கம்: வா.கி.குமார்
|
|
12. மே 2008 09:41 |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொள்கைகளை கிழக்கு மாகாண மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தெளிவாகப் பறைசாற்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் சாதாரணமான சூழ்நிலையையும், ஜனநாயகத்தையும் மீண்டும் கொண்டுவர இருப்பதுடன், அங்கு அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண மக்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் வழங்கும் அரசாங்கத்தின் கொள்கையை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
"கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பெருமளவான வாக்காளர்கள், அமைதியான முறையில் விருப்பத்துடன் வாக்களித்திருந்தனர். இதன் மூலம் அப்பகுதி மக்கள் சுதந்திரமான, சுபீட்சமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளமை தெளிவாகப் புலனாகியுள்ளது" என கிழக்கு மாகாணசபை தேர்தல் வெற்றிதொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
"இந்த முக்கியமான தேர்தலில் பங்குபற்றிய அனைத்து அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகள், பொது அதிகாரிகள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தேர்தலை சிறப்பாக முடிப்பதற்கு பணியாற்றியிருந்தனர்" என மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.
இந்த அமைதியான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்வார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
|