நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள், தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தமது வாக்குகளை அளித்திருப்பதாக பிள்ளையான்குழுவின் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குக் அளிக்கப்பட்ட வாக்குகளில் 75,000 வாக்குகள் தமிழ் மக்களால் அளிக்கப்பட்டிருப்பதால் பிள்ளையானே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கூறினார்.
“தமிழர் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டுமென எதிர்பார்த்து தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். இதன்காரணமாகவே பிள்ளையான் மட்டக்களப்பில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார்” என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பிள்ளையான்குழுவின் அரசியல்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூடி ஆராய்ந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் யார் என்பது இன்றையதினம் அறிவிக்கப்படுமென தாம் எதிர்பார்ப்பதாகவும், தமிழ் மக்களுக்கு சார்பாகவே நியமனம் அமையும் எனவும் பிள்ளையான்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லா முதலமைச்சராக வந்தாலும் இனப்பாகுபாடின்றி இணைந்து வேலைசெய்வதற்குத் தயாராக இருப்பதாக பிள்ளையான்குழுவின் தலைமை வேட்பாளர் பிள்ளையான் பி.பி.சி. செய்திச்சேவைக்குக் கூறியிருந்தார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபைத் தலைவர் யார் என்பது பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இறுதித் தீர்மானம் எடுப்பார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“பிள்ளையான் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர்.
இவர்களில் யார் கூடுதலான பிரதிநிதிகளைப் பெற்றிருக்கிறாரோ அவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார்.
இதுவே ஆரம்பத்தில் இணங்கிக்கொள்ளப்பட்ட விடயம்” என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
“தேர்தலில் பங்குபற்றிய அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முதலமைச்சர் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் கடும் முருகல் நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கூடுதலான உறுப்பினர்களை ஹிஸ்புல்லாவே பெற்றுக்கொண்டுள்ளதால் முதலைமைச்சர் பதவி ஹிஸ்புல்லவுக்கே வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
|