சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் கட்டிடங்களுக்கிடையில் புதையுண்டோ அல்லது காயமடைந்தோ இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை பிற்பகல் 2.28 மணிக்கு ஏற்பட்ட இந்தப் பூகம்பம் ரிச்டர் அளவு கோலில் 7.9 என பதிவாகியுள்ளது
இந்த பூகம்பத்தின் பாதிப்பு வெகு தொலைவிலுள்ள பீஜிங் மற்றும் ஷாங்ஹாய் நகரிலும், அருகிலுள்ள தாய்லாந்து மற்றும் தாய்வானில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்களும் ஆட்டம் காணும்படியாக இருந்ததாக சீன செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 30 ஆண்டுகளில் அந்தப் பகுதியை தாக்கிய மிகக் கடுமையான பூகம்பம் இதுவாகும். சீசுவான் பகுதி அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் சீன செய்தி நிறுவனமான சின்ஹவா மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பாடசாலை ஒன்று இடிந்து விழுந்ததில் 900 சிறார்கள் புதையுண்டு போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் 80 சதவீத அளவுக்கு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழு அளவிலான மீட்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சீன அதிபர் கூ ஜின்டாவோ கூறியுள்ளார். அந்தப் பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர் வென் ஜியா போவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளார்.
சீனாவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த பூகம்பம் அந்நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஒலிம்பிக் நடக்கும் பகுதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 1976ம் ஆண்டு வடக்கு சீனாவில் 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் இரண்டரை லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
|