ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மீண்டும் இலங்கையை தெரிவுசெய்ய வேண்டாமென ஜிம்மி காட்டர் நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தத் தேர்தலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்து இலங்;கை மீளத்தெரிவு செய்யப்படுவதை தடுக்குமாறும் ஜிம்மி காட்டர் நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகளுக்காக பாரிய பங்களிப்பு செய்யும் நாடுகளைக் கொண்ட புதிய பேரவையை உருவாக்க வேண்டுமென தாம் நம்புவதாகவும், அந்த உறுப்பினர்கள் தராதரமிக்க, தெளிவான புதிய நடவடிக்கைகளை எடுப்பவர்களாக இருக்க வேண்டுமெனவும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உலகிலேயே காணாமல் போனவர்கள் அதிகமுள்ள நாடாக இலங்கையுள்ளதெனவும், இது தொடர்பில் எவ்வித கரிசனையும் இல்லாமல் இலங்கை உள்ளதெனவும் ஜிம்மி காட்டர் நிலையத்தின் அறிக்கiயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆசிய நாடுகளுக்கான 4 உறுப்புரிமைகளைப் பெற்றுக் கொள்ள இலங்கையுடன் போட்டியிடும், பஹ்ரைன், ஜப்பான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் கிழக்குத் திமோர் ஆகிய நாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருக்கும் ஜிம்மி காட்டர் நிலையம், இந்த நாடுகள் மனித உரிமைகளைப் பேணுவதில் இலங்கையை விட சிறந்த அடைவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முகமாக நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில், இலங்கையின் உறுப்புரிமையைப் பாதுகாக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான இறுதி அறிக்கையை ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக சமர்ப்பித்ததாகவும், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலம் மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் 50 நாடுகளின் சிபாரிசுகளை இலங்கை பெற்றுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
"நாம் எமது அங்கத்துவத்தைப் பாதுகாக்க முடியும் என நம்பிக்கை வைத்துள்ளோம். பொறுத்திருந்து பாருங்கள். எமக்கு அங்கத்துவம் கிடைக்குமானால் மனித உரிமைகள் பேரவையில் எமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்" எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
|