| காடுவெட்டி குரு கைது: இது நெஞ்சுக்கு அநீதி -ராமதாஸ் |
|
|
| வா.கி.குமார் | |
| 6. July 2008 20:53 | |
|
காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருச்சியில் சனிக்கிழமை ராமதாஸ் அளித்த பேட்டி: ""பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் கருணாநிதி. குருவை நள்ளிரவில் கைது செய்து "மினி எமர்ஜென்சி'யை நினைவுபடுத்தி இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வன்னியர் சங்கத் தலைவர் குரு மீது பொய் வழக்கு ஜோடித்து பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து வந்திருக்கிறது. நள்ளிரவில் என்னைக் கைது செய்தார்கள் என்று அவர் (கருணாநிதி) அலறித் துடித்தபோது, முதல் ஆளாக நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். அதெற்கெல்லாம் கைமாறாகத்தான் 2 கோடி வன்னிய மக்களின் தலைவரை, பாமகவின் முன்னணித் தலைவராக இருக்கும் குருவைக் கைது செய்திருக்கிறார்கள். சோதனைக்கான "வாரண்ட்' இல்லாமல் வீட்டின் கதவை உடைத்து சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். அத்தோடு நிற்காமல், மாட்டுக்கொட்டில், வைக்கோல்போர், வாகனங்கள் ஆகியவற்றையும் சோதனை போட்டுவிட்டு, ""ஒன்றும் கிடைக்கவில்லை'' என்று எங்களது வழக்குரைஞர் பாலுவிடம் எழுதிக் கொடுத்துள்ளனர். காடுவெட்டியில் ஓர் இளைஞர், உள்ளூர் சண்டையில் தன்னை சிலர் அடித்துவிட்டதாக மீன்சுருட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் குருவின் பெயரைச் சேர்க்க காவல் துறை உயர் அலுவலர்கள் அறிவுறுத்தினர். சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் அன்றைய தினம் குரு ஊரில் இல்லை. கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டார். கடந்த மே 1-ம் தேதி, ""பிணையில் வெளியில் வரத்தக்க'' பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 3-ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தபோது கொலை முயற்சி உள்ளிட்ட ""பிணையில் வெளிவர முடியாத'' பிரிவுகளையும் சேர்த்துள்ளனர். ஊர்த் திருவிழாக்களிலும், பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கட்சியினர், உறவினர்களின் இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டு வருபவரை "தலைமறைவாக இருந்த குற்றவாளி' என்று நீதிமன்றத்தில் கூறி "வாரண்ட்' பெற்றுள்ளனர். ஊருக்கு உபதேசம் செய்பவர்கள்: கூட்டணியில் இருந்து பாமகவை வெளியேற்ற குருவின் வன்முறைப் பேச்சுதான் காரணம் என்கிறார்கள். குளித்தலையில் அண்மையில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தின்போது திமுக எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் நேரில் சென்று கலவரத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நேரு மற்றும் திமுக மாவட்டச் செயலர், எம்எல்ஏக்கள், பேச்சாளர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினர். மதுரையில் "தினகரன்' நாளிதழ் அலுவலகத்தில் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடையதாகக் கூறப்படுவோர் அன்றே பிணையில் வெளிவந்தனர். பெரிய ஜனநாயகவாதி, இந்தியாவுக்கே வழிகாட்டி, மூத்த அரசியல்வாதி என்று பேசப்படும் கருணாநிதி, தற்போது நெஞ்சுக்கு நீதியின் 5-ம் பாகத்தை எழுதி வருகிறார். ஆனால், குரு விஷயத்தில் மனசாட்சிப்படி, "நெஞ்சுக்கு அநீதி' என்றுதான் எழுத வேண்டும். இவர்களின் அராஜகத்தை பெரிய வரலாறாக எழுதலாம். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், மத்தியக் கூட்டணித் தலைவர்களுக்கும் இதுகுறித்து விரிவாக எழுதுவோம். வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம். குரு கைது செய்யப்பட்டதற்கான எதிர்ப்பை அறவழியில் வெளிப்படுத்தும் விதத்தில் பொதுச் சொத்துக்கு சேதமின்றி, போக்குவரத்துக்கு இடையூறின்றி உண்ணாவிரதம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்த கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். குருவைக் கொலை செய்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறப்படும் சுப. இளவரசன் என்பவர் ஏ.கே. 47, வீச்சரிவாள், வெடி குண்டுகளுடன் சென்னை நோக்கிச் சென்றபோது போலீஸôர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, மூத்த அமைச்சர் ஒருவர் காவல் துறையினருக்குக் கட்டளையிட்டு சுப இளவரசனையும், அவர்களது ஆள்களையும் விடுவித்துள்ளார். சுப. இளவரசன் இரண்டு முறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். வன்னியர் நல வாரியம் அமைப்பதற்காக ஆர்க்காடு வீராசாமியும், சுப. இளவரசனும் சந்தித்துப் பேசியுள்ளனர். கூட்டணியில் இருந்தபோது, திமுக தலைவர்களில் இருவர் தவிர, மற்றவர்கள் சரியில்லை என்று கூறியது உண்மைதான். தற்போது அந்த இருவரும் தங்களையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதுபோல குருவின் கைது இருக்கிறது'' என்றார் ராமதாஸ். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கைது விஷயத்தில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி நடந்துகொண்டிருக்கும் விதம் ""நெஞ்சுக்கு அநீதியானது'' என்று வர்ணித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ச. ராமதாஸ்.
