| மன்மோகன் அரசு மீது "குற்றப் பத்திரிகை': இடதுசாரிகள் முடிவு |
|
|
| வா.கி.குமார் | |
| 7. July 2008 10:44 | |
|
விலைவாசி உயர்வு, பணவீக்கம், குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்டவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் ஆகியன இணைந்து தயாரிக்கும் "குற்றப் பத்திரிகை'யில் இடம்பெறும் என மூத்த இடதுசாரித் தலைவர் கூறினார். காங்கிரஸ், சமாஜவாதி கட்சி ஆகியன ஏற்படுத்திக் கொண்டுள்ள சந்தர்ப்பவாத ஒத்துழைப்பு குறித்தும் மக்களிடம் பிரசாரம் செய்யப்படும். மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தை இடதுசாரிகள் இணைந்து தில்லியில் ஜூலை 14-ல் துவக்குகின்றன. இதில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கப்படும். நாடு முழுவதும் எல்லா முக்கிய நகரங்களிலும் நடைபெறும் பேரணிகள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எங்களது எதிர்ப்பு அணுசக்தி ஒப்பந்தம் என்ற ஒரே ஒரு பிரச்னையைப் பற்றியது மட்டுமல்ல. பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதாரப் பிரச்னையைத் தவறாக கையாண்டது போன்றவை குறித்தும் பிரசாரம் செய்வோம் என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா. பல்வேறு பிரச்னைகளில் இடதுசாரிகளின் நிலை குறித்து மக்கள் மனதில் உள்ள தவறான கருத்துகளை நீக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் டி.ராஜா கூறினார். அணுசக்தி ஒப்பந்தத்தின் தீமைகள் குறித்து நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர்கள், மாணவர்கள் அறிய வேண்டும். அதற்காக கல்லூரி வளாகங்களில் விசேஷ கவனம் செலுத்தப்படும் என பார்வர்டு பிளாக் செயலர் ஜி.தேவராஜன் குறிப்பிட்டார். அணு மின்சாரத்துக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆனால் எரிசக்திக்கு அணுசக்தி மட்டுமே தீர்வு என அரசு கூறுவது தவறானது. இது குறித்து மக்களுக்கு விளக்குவோம் என்றார் தேவராஜன். இடதுசாரிகளுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள், இந்தப் பிரசாரத்தில் இணைத்துக் கொள்ளப்படுமா எனக் கேட்டதற்கு, "அது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை' என்றார் அவர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக "குற்றப் பத்திரிகை' தயார் செய்ய இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
