| காடுவெட்டி குருவுக்கு எதிரான வாக்குமூலம்: ஆதாரத்தை வெளியிட்டது போலீஸ் |
|
|
| வா.கி.குமார் | |
| 9. July 2008 21:29 | |
|
காடுவெட்டி குரு மீது வழக்கு எதையும் தாம் தரவில்லை என்று திங்கள்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள குணசேகரன், காடுவெட்டி குரு தம்மைத் தாக்கியதாக மே மாதம் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தைக் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். மீன்சுருட்டியைச் சேர்ந்த குணசேகரன், தத்தனூரைச் சேர்ந்த செல்வி ஆகியோர் அளித்த வெவ்வேறு புகார்களின் அடிப்படையில், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு கடந்த 5-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், அப்படி எந்தப் புகாரையும் தாங்கள் தரவில்லை என்று கூறி இருவருமே தனித்தனியாக திங்கள்கிழமை நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். எனவே, பொய்யான புகாரின் அடிப்படையில் பழிவாங்கும் நடவடிக்கையாக காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டுள்ளார் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். இதற்கிடையில், குணசேகரன் புகார் கொடுத்தது மட்டுமின்றி, நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சாட்சியமும் பதிவு செய்திருக்கிறார் என்று நிரூபிக்கும் வகையில் அந்த ஆவணத்தின் நகல்களைக் காவல்துறையினர், பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளனர். இந்த ஆவணம் பெரம்பலூர் நீதித் துறை நடுவரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காடுவெட்டியைச் சேர்ந்த தாம், அங்கு டீ கடை வைத்திருப்பதாகவும், வங்கிக் கடன் பெறுவதற்காக ஊராட்சித் தலைவர் நாகரத்தினத்தை அணுகியதாகவும் குணசேகரன் கூறியதாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதம் கழித்துதான் கடன் கிடைக்கும் என நாகரத்தினம் கூறிவிட்டார். 4 நாட்கள் கழித்து வன்னியச் சங்கத் தலைவர் குரு என்பவர் கூப்பிடுவதாகச் சொன்னதால் தாம் அங்கு சென்றதாக குணசேகரன் குறிப்பிட்டுள்ளார். அங்கு குரு தன்னுடைய கையால் இரண்டு கன்னத்திலும் இரண்டு முறை அறைந்ததில் கீழே விழுந்துவிட்டேன். அப்போது அங்கிருந்த 4 பேர் கட்டையால் என்னை அடித்தார்கள். அதில் எனக்கு இடதுபக்க காதில் அடிபட்டு காது கேட்கவில்லை என்றும் குணசேகரன் கூறியுள்ளார். பின்னர் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அங்கு காதில் ரத்தம் வந்ததால் தஞ்சாவூருக்குக் கொண்டு போகச் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பத்திரிகைகளுக்கு வந்துள்ள இந்த அறிக்கையின் இறுதியில் ""வாதியான சாட்சி சொல்லச் சொல்ல சுருக்கெழுத்துத் தட்டச்சரால், என்னால் சொல்லப்பட்டு நேரடியாக தட்டச்சு செய்யப்பட்டு, வாதியிடம் படித்துக் காண்பித்து, சரியென்று ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு என்னால் கையொப்பமிடப்பட்டது'' என்று தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. இந்த நகல் எங்கிருந்து வந்தது என்ற சந்தேகத்தின் பேரில் அரியலூர் மாவட்டக் காவல் மற்றும் டி.ஐ.ஜி. அலுவலகங்களில் விசாரித்தபோது, தாங்கள்தான் இதை அனுப்பியதாகக் கூறினர்.
நீதிபதி முன்னிலையில் தரப்பட்ட ரகசிய வாக்குமூலத்தின் நகல்தான் என்றும் அவர்கள் கூறினர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




