பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போமென்பதுடன், தங்களது குறிக்கோளை நிறைவேற்றுவோம் என்று இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கு கோருவது குறித்து விவாதிப்பதற்கு சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு, நேற்றுப் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் கூறியது.
இந்தக் கூட்டத்தில் சிபு சோரன், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட நான்கு கட்சிகளின் தலைவர்கள் மாத்திரம் வேறுவேறு காரணங்களுக்காக கலந்துகொள்ளாத நிலையில், ஏனையவர்கள் கலந்து கொண்டனர்.
தமக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த இடதுசாரி கட்சிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைந்து செயற்பட முடியாமல் போனமை குறித்து வருத்தமளிப்பதாக கூறினார்.
பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் வெற்றி பெறுமென்ற நம்பிக்கை உள்ளதாகவும், தங்களது குறிக்கோளை நிறைவேற்றுவோமெனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள சமாஜ்வாடி கட்சிக்கும் தனது நன்றியை சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கியுள்ள நிலையில்;
லல்லு பிரசாத் யாதவ், சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்ததாகவும், அனைவரும் இடதுசாரிகளின் கூட்டணியை முறித்துக் கொண்டதை ஆமோதித்ததாகவும் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் தயாராக வேண்டுமெனக் குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, நேற்றிரவு நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கு கோரும் திகதி இறுதி செய்யப்பட்டு குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்கப்படுமெனவும் கூறினார்.
22 ஆம் திகதி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது
நம்பிக்கை வாக்கு கோருவதற்காக எதிர்வரும் 21 ஆம் திகதி மத்திய அரசு பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ள நிலையில், 22 ஆம் திகதி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறலாமெனத் தெரியவருகிறது.
மத்திய அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் வாபஸ் பெற்றுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருவதற்கு தனது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், தனது அரசாங்கத்துக்கு போதிய ஆதரவிருப்பதாகவும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
வெகு விரைவில் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருவதற்கு ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் கூறியதாகவும், மேலும், நம்பிக்கை வாக்கு கோருவற்காக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான திகதியை நேற்று மாலைக்குள் அறிவிப்பதாகவும் ஜனாதிபதியிடம் பிரதமர் தெரிவித்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஜூலை 21 ஆம் திகதி கூடுமென்பதுடன் 22 ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமெனவும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மாலை வெளியாகுமெனவும் தெரியவருகிறது.
எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: கருத்துக்கணிப்பு
தற்போதைய நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காதென்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 183 முதல் 193 இடங்கள் வரையே வெற்றி பெறுமெனவும் அந்தக் கருத்துக்கணிப்பு குறிப்பிடுகின்றது.
தற்போதைய மக்களவையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பலம் 225 ஆகவுள்ள நிலையில் சுமார் 30 முதல் 40 இடங்களை ஆளும் கூட்டணி இழக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இதற்கான கருத்துக்கணிப்பை “தி வீக்” எனும் ஆங்கிலப் பத்திரிகை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதையடுத்து ஜூலை 9ஆம் , 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் 54 மக்களவைத் தொகுதிகளிலுள்ள 9 ஆயிரத்து 604 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்ட நிலையிலேயே இந்த முடிவு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 32 சதவீத வாக்குகளைப் பெறுமெனக் கூறியுள்ள கருத்துக்கணிப்பு, இதன்பிரகாரம் இந்தக்; கூட்டணிக்கு 179 இடங்களிலிருந்து 189 இடங்கள் வரை கிடைக்குமெனத் குறிப்பிடப்படுகிறது.
மேலும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 46 இடங்களிலிருந்து 56 இடங்கள் வரை வெற்றி பெறுமென்பதுடன், இடதுசாரி கட்சிகளுக்கு 37 முதல் 47 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி 52 முதல் 62 இடங்கள் வரை வெற்றி பெறுமெனவும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 16 முதல் 26 இடங்கள் வரை வெற்றி பெறுவார்களென கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
|