| நளினி வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடி |
|
|
| வா.கி.குமார் | |
| 16. July 2008 06:08 | |
|
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் நளினி. தற்போது வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். இவர் தன்னை முன் கூட்டி விடுதலை செய்யக் கோரி மனு செய்தார். இம்மனுவை அரசு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நளினி வழக்கில் தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு செய்தார். "நளினி விடுதலையை அரசு எதிர்க்காது. அவருக்கு அரசு உதவும்' என குறிப்பிட்டிருந்தார். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. "நளினியின் விடுதலையை அரசு எதிர்க்கும்' என அதில் தெரிவிக்கப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமி மனு மீது நீதிபதி எஸ். நாகமுத்து அளித்த தீர்ப்பு: நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அவருக்கு கருணை காட்டக் கூடாது எனவும் கூறியுள்ளது. ஆளுநரின் ஆலோசனைப்படி தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படி குறைக்கப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. இதன் பின்னர் தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனுவை அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதிலிருந்து நளினிக்கு அரசு உதவும் என்ற சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பது தெரியவருகிறது. வேலூர் சிறையில் நளினியை, பிரியங்கா காந்தி சந்தித்து பேசிய பின்னர் அரசின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை. ஏனென்றால், நளியின் விடுதலையை அரசு எதிர்க்கும் என அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்பில் அரசு என்பது மக்களுக்காகத்தானே அன்றி, எந்த தனிப்பட்ட நபருக்கும் அல்ல. எனவே இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியை எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்பதை அனுமதிக்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கு பொதுநலன் சம்பந்தப்பட்டது என்பதாலும் சுப்பிரமணியன் சுவாமி மத்திய முன்னாள் அமைச்சர் என்பதாலும், அவர் குறிப்பிட்டுள்ளது போல், இவ்வழக்கில் ஒரு முடிவு எடுக்க அவரது கருத்தை நீதிமன்றத்துக்கு தெரிவித்து உதவலாம். இதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|






நளினி வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் கருத்து தெரிவிக்க மட்டும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

