| போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஏ.பி.சி.யின் தெற்காசிய நிருபர் சிங்கப்பூரில் கைது |
|
|
| வா.கி.குமார் | |
| 19. July 2008 20:49 | |
சிங்கப்பூரில் கைதான ஏ.பி.சி.யின் தெற்காசியாவுக்கான நிருபர் பீற்றர் லொய்ட் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார்.
41 வயதுடைய லொய்ட் கடந்த புதன்கிழமை கைதானார். போதைப்பொருள் தொடர்பான அவர் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 வருட சிறைத் தண்டனையும் 15 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்படும். சிறியளவிலான மெதம்பெற்றமைன், புகைபிடிக்கும் சுங்கான், 6 ஊசி மருந்தேற்றும் சிறிஞ்சுகள் ஆகியவற்றை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். 31 வயதுடைய சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதானதையடுத்தே லொய்ட்டை கைது செய்ததாக சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்பு தேசிய பிரிவு அறிக்கை விடுத்திருப்பதாக ஏ.பி.சி. தெரிவித்தது. தொடர்மாடி வீடொன்றில் 31 வயதுடைய நபரை 0.6 கிராம் மெதம்பெற்றமைனுடன் கைது செய்ததாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது தனக்கு சிங்கப்பூரிலிருக்கும் அவுஸ்திரேலியப் பிரஜையே அதனை விநியோகித்ததாகவும் அந்த அவுஸ்திரேலியப் பிரஜை சமூக ரீதியான பயண விசாவில் வந்திருந்ததாகவும் சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்திருக்கிறது. பின்னர் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் அவுஸ்திரேலியப் பிரஜை கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் சுமார் 0.8 கிராம் மெதம்பெற்றமைன் மற்றும் சுங்கான், 6 ஊசியேற்றும் சிறிஞ்சுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்தது. பின்னர் அவரின் சிறுநீர் சோதிக்கப்பட்டபோது அம்பீற்மைன்ஸ் தொடர்பாக பிடிக்கப்பட்டதாகவும், அவர் மீது போதைப்பொருள் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, லொய்ட் மீதான வழக்கு விபரங்கள் இன்னமும் முழுமையாக தமது நிறுவனத்துக்கு அறிவிக்கப்படவில்லையென ஏ.பி.சி.யின் செய்திப் பணிப்பாளர் ஜோன் கமரூன் தெரிவித்துள்ளார். 2002 இன் நடுப்பகுதியில் ஏ.பி.சி.யின் தெற்காசியப் பிரிவுக்கு நிருபராக லொய்ட் நியமிக்கப்பட்டார். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளின் செய்திகளை அவர் சேகரித்து அனுப்பி வந்தார். சமீபத்தில் தெற்காசியப் பிராந்திய செய்திப் பிரிவிலும் அவர் பணியாற்றினார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





சிங்கப்பூரில் கைதான ஏ.பி.சி.யின் தெற்காசியாவுக்கான நிருபர் பீற்றர் லொய்ட் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார்.




