| எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா!: அத்வானி யோசனை |
|
|
| வா.கி.குமார் | |
| 24. July 2008 07:55 | |
மத்திய அரசை ஆதரிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தங்களுடைய மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யலாம் என்று கருதுகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி.
பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்குடன் இணைந்து தில்லியில் நிருபர்களை புதன்கிழமை சந்தித்த அத்வானி இதைத் தெரிவித்தார். "கட்சி மாறி வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததைப் பற்றிக் கூறும்போது, ""போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலைவிட பெரிதாக இருக்கிறதே'' என்று அதிர்ச்சி அடைந்தேன். போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் லஞ்சம் பெற்றது யார் என்ற தகவல் வெளிவராமல் அரசு மறைத்ததால், 1989-ல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கூண்டோடு ராஜிநாமா செய்து அரசுக்கு எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தோம். (அப்போதும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியிருந்தன). அதையே மீண்டும் செய்யலாம் என்று கருதுகிறேன். மக்களவைக்கு வெகு விரைவிலேயே தேர்தல் வந்துவிடும். இனி இந்த அரசால் நிர்வாகத்தை நடத்திச் செல்வது எளிதாக இருக்காது. இந்த அரசின் முறையற்ற செயல்களை மக்களிடம் எடுத்துக் கூறுவோம். பாரதிய ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் பலர் கட்சிக் கட்டளையை மீறி ஆளும் கூட்டணிக்கு வாக்களித்திருப்பது கட்சித் தொண்டர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருக்கிறது. பணத்தாசைதான் இதற்குக் காரணமே தவிர, அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்ற எண்ணம் காரணம் அல்ல. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தால் அரசு நிச்சயம் தோற்றிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். சோதிடரை நான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்திருக்கிறார்; அவருக்கு எப்போது இதில் ஆர்வம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலின்போது ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்தோம் என்பது உண்மையல்ல; ஆனால் அந்தத்தேர்தலில் ஆளும் கூட்டணி நிறுத்திய வேட்பாளர் தோற்றிருந்தால் அரசு ராஜிநாமா செய்திருக்க வேண்டும். உங்களில் யாராவது ஒருவர் பிரதமர் பதவியை ஏற்கலாம் என்றுதான் மூன்றாவது அணியைச் சேர்ந்த தலைவர்களிடம் அப்போது கூறப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கறைபடிந்தவர்களை அமைச்சர்களாக சேர்த்துக்கொண்டு ஆளத் தொடங்கியது; ஆட்சி முடிவடையும் காலத்திலும் கறைபடிந்த முறையிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சியைத்தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்களைத் தருகிறோம் என்று ஆசை காட்டியபிறகும் கூட ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்காத எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பாராட்டுகிறேன்' என்றார் அத்வானி. |
| < முந்தைய | அடுத்த > |
|---|






மத்திய அரசை ஆதரிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தங்களுடைய மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யலாம் என்று கருதுகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி.
