| பெங்களூரில் தொடர் குண்டுவெடிப்பு 3 பேர் பலி 20ற்கும் அதிகமானவர்கள் காயம் |
|
|
| வா.கி.குமார் | |
| 25. July 2008 13:17 | |
|
இந்தியாவின் பெங்களூரில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 5 தொடர்குண்டு வெடிப்புக்களில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 20ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மதியம் 1 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று சில நிமிட வித்தியாசத்தில் 5 வேறுவேறு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. குறைந்த சக்தியுள்ள குண்டுகள் வெடித்ததால் பெரியளவில் சேதம் ஏற்படவில்லையென இந்தியச் செய்திகள் கூறுகின்றன. குண்டுவெடிப்புகள் காரணமாக தொலைபேசி இணைப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவ இடங்களை வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக இந்திய பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை, நேற்றையதினம் சிறிநகர் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டிருந்ததுடன், 18 பேர் காயமடைந்தனர். சனநெரிசல் மிக்க பேரூந்தொன்றின் மீது இனந்தெரியாத நபர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|



