| திராவிடர் கழகம் சார்பில் கச்சத்தீவை மீட்கக்கோரி 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 2. August 2008 11:37 | |
|
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- பொதுக்கொள்கை ஒப்பந்தம் இலங்கையில் நடைபெறும் சார்க் மாநாட்டிற்கு செல்லும் பிரதமர் மன்மோகன்சிங், ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண ராஜபக்சே அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு உதவிடும் வகையில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ எந்த காரியத்தை மத்தியஅரசு செய்தாலும் அது மனிதநேயத்திற்கு எதிரானது ஆகும். இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வது, சிறைப்பிடிப்பது போன்ற கொடுமைகள் அன்றாட அவலங்களாகி வருகின்றன. இதனை தடுத்து நிறுத்திட மத்தியஅரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஏற்கனவே கச்சத்தீவுப் பகுதியில் நமக்குள்ள மீன்பிடி ஒப்பந்த ரத்து போன்றவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்க முன்வரவேண்டும். அதைவிடவும் முக்கியமாக மீன்பிடித்தல் தொடர்பான ஒரு பொதுக்கொள்கை ஒப்பந்தத்தை இருநாடுகளும் புதிதாகப்போட வேண்டும். ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு படகுக்கும் லைசென்ஸ் கொடுத்து, அதில் ஜி.பி.எஸ்.கருவியை பொருத்தும் முறையை கொண்டுவரவேண்டும். இந்த கருத்துக்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 4-ந்தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை தாங்குகிறேன். கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டவிரோதம் என்று 26.7.1997-ல் ராமேஸ்வரத்தில் மாநாடு நடத்தினோம். அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தோம். அந்த வழக்கு 11 ஆண்டாக நடைபெற்று வருகிறது. வழக்கில் மத்திய அரசு காலஅவகாசம் கேட்டு வந்தது. இந்த நிலையில் அந்த வழக்கை விரைந்து நடத்த முயற்சி எடுத்து வருகிறோம். காலநிர்ணயம் வேண்டும் சேதுசமுத்திர திட்டம் 150 ஆண்டுகால கனவு. உச்சநீதிமன்றம் மத உணர்வை புண்படுத்தக்கூடாது என்று மாற்றுபாதை பற்றி பரிசீலிக்க 6 பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியினர் எப்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற காலநிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த திட்டத்தை காலதாமதம் செய்ய வேண்டும் என்பதற்கு காரணம் ராமர்அல்ல, அரசியல் காரணம்தான். ஓராண்டுக்குள் சேதுசமுத்திர திட்டம் முடிக்கப்பட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெயர் வந்துவிடும் என்பதுதான் காரணம். இந்த திட்ட பணிகள் முக்கால் வாசி முடிந்து, கால்பகுதிதான் முடியவேண்டிய நிலையில் உள்ளது. 2009-க்குள் முடிக்க வேண்டும் எனவே, 6 பேர் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்ய காலநிர்ணயம் செய்ய வேண்டும். அந்த அறிக்கை வந்தவுடன் திட்டத்தை ஓராண்டுக்குள் விரைவாக முடிக்க வேண்டும். இது மக்களின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினை ஆகும். ஆகவே திட்டத்தை மத்திய அரசு தாமதிக்கக்கூடாது. இது குறித்த ஒத்தக்கருத்துள்ளவர்களை இணைத்து மக்கள் இயக்கத்தை நடத்த இருக்கிறோம். சேதுசமுத்திர திட்டம் 2009-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு கி.வீரமணி கூறினார். தமிழர்கள் புரிந்து கொள்வார்கள் ஒகேனக்கல் பிரச்சினையில் பேசியது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டு இருப்பது பற்றி நீங்கள் என்ன கருத்து தெரிவிக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, "இது பற்றி சம்பந்தப்பட்டவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். இதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால் சரிதான், தமிழர்கள் புரிந்து கொள்ளும் நேரத்தில் புரிந்து கொள்வார்கள்'' என்று கி.வீரமணி கூறினார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





கச்சத்தீவை மீட்கக்கோரி தமிழகம் முழுவதும் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கி.வீரமணி கூறினார்.
