| கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்துக்கட்சி குழு பிரதமரை சந்திக்கவேண்டும் |
|
|
| வா.கி.குமார் | |
| 6. August 2008 16:56 | |
|
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்துக்கட்சி குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நிலங்கள் வாங்கி குவிப்பு தமிழகத்தில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலங்களை வாங்கி குவிப்பதை தடுக்க தமிழக அரசு சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கடந்த 2 வருடங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறோம். தற்போது இந்த கோரிக்கையை வலியுறுத்தி மற்ற கட்சிகளும் ஆதரவு குரல் கொடுக்க முன்வந்திருப்பதை வரவேற்கிறேன். மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் விளைநிலங்களை வாங்குவதை தடுக்க சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இந்த மாதம் 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும். சமீப காலமாக தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமானால் கச்சத்தீவை மத்திய அரசு மீட்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து கட்சி குழு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒத்த கருத்துடன் இருக்கிறார்கள். எனவே முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி குழுவை நியமித்து இவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். தேவைப்பட்டால் தமிழக சட்டசபையை கூட்டி கச்சத்தீவை மீட்பதற்கான தீர்மானம் நிறைவேற்றவேண்டும். தென் மாவட்டங்களில் தமிழக அரசு புதிய தொழிற்சாலைகளை தொடங்காமல் புறக்கணித்து வருகிறது. எனவே தென் மாவட்ட மக்களின் நலனை மனதில் வைத்து அடுத்த ஆண்டு போடப்படும் அனைத்து ஒப்பந்தங்களும் தென்மாவட்டங்களில் போடவேண்டும். தென்மாவட்டம் ரெயில்வே துறையாலும், கல்வி துறையாலும், போக்குவரத்து துறையாலும் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து வருகிற 11-ந் தேதி மதுரையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் போராட்ட அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






