5. December 2008 06:01
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
3. October 2008 18:45
11. October 2008 23:48
15. October 2008 12:52
4. October 2008 12:47
ஜோர்ஜியா மீது ரஸ்ய விமானங்கள் தாக்குதல் 2000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
10. August 2008 21:04
georgien11.jpgரஷ்ய யுத்த விமானங்கள் இரண்டாவது நாளாக நேற்று ஜோர்ஜியா மீது குண்டுமாரி பொழிந்து வருவதால் 2000க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் கட்டிடங்கள், வீடுகள் என்பன தீ பற்றி எரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்குமிடையே முழு அளவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா 6000 துருப்புக்களை தரை மார்க்கமாகவும் 4000 துருப்புக்களை கடல் மார்க்கமாகவும் ஜோர்ஜியாவுக்குள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு இரு நாடுகளுக்கும் ஐரோப்பிய யூனியன் உட்பட சர்வதேச சமூகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

ஜோர்ஜிய தலைநகர் திபிலிஸியில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையிலுள்ள இராணுவ விமானத் தளமொன்று ரஷ்ய படையினரால் நேற்று தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோர்ஜியாவிலுள்ள சிவிலியன் இலக்குகள் மற்றும் இராணுவ இலக்குகள் மீது டசின் கணக்கான யுத்த விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய குண்டு வீச்சு விமானங்கள் மேற்கொண்டு வரும் கடும் தாக்குதல்களையடுத்து ஜோர்ஜியா யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜோர்ஜியா மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதல் அபாயகரமான யுத்த விஸ்தரிப்புக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

ஜோர்ஜியா மீது ரஷ்யா முழு அளவிலான இராணுவ ஆக்கிரமிப்புக்கு வழிகோலியுள்ளது என ஜோர்ஜிய ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்துள்ள பிராந்தியமான தென் ஒசீசியாவிலிருந்து ஜோர்ஜியப் படைகளை தான் வெளியேற்றியுள்ளதாகவும் தென் ஒசீசியாவுடன் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கும் வகையிலேயே படை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ரஷ்யா கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

தனது சொந்த மக்களுக்கு எதிராகவே ஜோர்ஜியா குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது என்று ரஷ்ய பிரதமர் ஜோர்ஜியா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தெற்கு ஒசீசியாவிலுள்ள கிராமங்களில் இன அழித்தொழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் ரஷ்யா ஜோர்ஜியாவை கண்டித்துள்ளது.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி என்ற முறையில் ரஷ்ய பிரஜைகள் எங்கிருந்தாலும் அவர்களைப் பாதுகாப்பது எனது கடமை. அதனையே நாம் இப்போது மேற்கொண்டு வருகின்றோம் என்று ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.

1990 களின் முற்பகுதியில் இழந்த தென் ஒசீசியா மாகாணத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஜோர்ஜியா முனைகின்றது. இதேவேளை தெற்கு ஒசீசிய பிரிவினை வாதிகளுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் ரஷ்யா ஆதரவளித்து வருகின்றது.

தென் ஒசீசியா மாகாணம் ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும் அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அப்போராளிகளுக்கு ரஷ்யா ஆதரவளிப்பதால் அமெரிக்கா, கொசோவோ போன்று அதற்கு சுதந்திரமளிக்க மறுக்கிறது. மாறாக அப்போராளிகளை அடக்கி ஜோர்ஜிய அரசை தனது கைக்குள் போட்டுக் கொண்டு பிராந்தியத்தில் ரஷ்யாவை நெருங்கி தனது இராணுவ திட்டங்களை நகர்த்த அமெரிக்கா முனைகிறது.

இதற்கிடையே சர்சைக்குரிய பகுதியில் ரஷ்ய அமைதிகாப்புப் படையினர் நிலை கொண்டிருப்பதுடன் சண்டை ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னர் தான் ஜோர்ஜிய அரசும் போராளிகளும் ரஷ்யாவின் மேற்பார்வையின் கீழ் போர் நிறுத்த சமரசத்துக்கு உடன்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அச்சமரசத் திட்டத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்துக் கொண்ட ஜோர்ஜிய அரசு போராளிகளின் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான அரசு நடப்பதாகக் கூறி படை எடுப்பை செய்துள்ளது.

இதனிடையே ஜோர்ஜியாவின் ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக ஜோர்ஜிய ஜனாதிபதி மிக்கையில் சகஸ்விலி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முற்று முழுதான இன அழிப்பு நடவடிக்கையில் ஜோர்ஜியா ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய பிரதமர் விளாடின் புட்டின் கூறியுள்ளார்.

மேலும் தென் ஒசீசியாவிலிருந்தும் பெரும் எண்ணிக்கையான அகதிகள் ரஷ்யாவை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ரஷ்யா பிரிவினைவாதிகளுக்கு உதவி வருவதாகவும் தென் ஒசீசியா மாகாண பிரிவினை வாதிகள் யுத்த நிறுத்தத்தை மீறி மேற்கொண்ட ஆட்லறி ஷெல் தாக்குதலில் அமைதிப்படையினர் உட்பட 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இவற்றுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருவதாகவும் ஜோர்ஜியா குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் 30க்கும் அதிகமான ரஷ்ய தாங்கிகளை தாங்கள் அழித்துள்ளதுடன் 10 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஜோர்ஜியாவில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள பகுதி தெற்கு ஒசீசியாவாகும். ஜோர்ஜியாவில் இருந்து இந்த பகுதியை பிரித்து தனி நாடாக அறிவிக்கக் கோரி பிரிவினைவாதிகள் போராடி வருகின்றனர்.

அண்மைகாலமாக அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக ஜோர்ஜியா மாறி வருவதால் தெற்கு ஒசீசியா பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சனியன்று தெற்கு ஒசீசியா பகுதியில் செயற்படும் பிரிவினைவாதிகள் மீது ஜோர்ஜியா இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து தலைநகர் டிக்சின்வாலியில் இரு தரப்பினருக்கும் இடையே உக்கிரமான சண்டை வெடித்தது. நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக இந்த சண்டை நீடித்தது.

இதற்கிடையே தெற்கு ஒசீசியா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தங்கள் இராணுவத்தை சேர்ந்த 10 வீரர்களை ஜோர்ஜியா இராணுவம் கொன்று விட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.

இதைத்தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தின் தரைப்படை பிரிவு ஒன்று சனிக்கிழமை தெற்கு ஒசீசியா பகுதிக்குள் அதிரடியாக பிரவேசித்தது.

மேலும் ஜோர்ஜியா தலைநகர் திபிசிலியின் புறநகர் பகுதியில் உள்ள வாசியானி இராணுவ தளம் மீது ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. பாகுடிபிசிலிசிகான் எண்ணெய் குழாய் செல்லும் பகுதியில் இந்த குண்டுகள் விழுந்து வெடித்தன.

இது தவிர வேறு இரண்டு இராணுவ தளங்களும் கருங்கடல் பகுதியில் உள்ள போதிலும் துறைமுகமும் ரஷ்ய குண்டுவீச்சுக்கு ஆளாகியது. இதில் துறைமுகத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த எண்ணெய் கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. கப்பல் கட்டும் தொழிற்சாலை முற்றிலும் சேதம் அடைந்தது.

8 முதல் 11 ரஷ்ய விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன என்று ஜோர்ஜியா பொருளாதார வளர்ச்சி துணை அமைச்சர் வாடோ கூறினார்.

தெற்கு ஒசீசியா பகுதியில் நடைபெறும் சண்டை மற்றும் ரஷ்ய விமானங்களின் குண்டுவீச்சு ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று ஜோர்ஜியா உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் உதியாஸ்விலி தெரிவித்தார்.

பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாலேயே நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம் என்று அவர் கூறினார். ஆனால் ஜோர்ஜியா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக பிரிவினைவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தெற்கு ஒசீசியா பகுதியில் நடைபெறும் இந்த மோதலால் ஜோர்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் முழு அளவில் போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதற்கிடையே ஜோர்ஜியா மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

ஜோர்ஜியாவின் இறையாண்மையை ரஷ்யா மதித்து நடக்க வேண்டும். அந்த நாட்டுக்குள் அனுப்பி உள்ள படைப்பிரிவை வாபஸ் பெற வேண்டும்.

சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தனது சிறப்பு தூதரை அனுப்பி வைக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீஸா ரைஸ் தெரிவித்தார்.

 
< முந்தைய   அடுத்த >