| ஜோர்ஜியா யுத்தநிறுத்தத்துக்கு அழைப்பு – ரஸ்யா நிராகரிப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 11. August 2008 14:12 | |
|
ஜோர்ஜியா ரஸ்ய படைகளுக்கெதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தவரவிட்டுள்ளதுடன் ரஸ்ய தூதரகம் ஊடாக யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளபோதும் ரஸ்யா அதனை நிராகரித்துள்ளது. அத்துடன் போரை முடிவுக்குகொண்டுவருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளத் தாங்கள் தயாரென ரஷ்யாவுக்கு கூறியதாகவும் ஜோர்ஜியா அறிவித்துள்ளது. ஜோர்ஜியப் படைகள் தெற்கு ஒஸெட்டியாவிலிருந்து விலகிவிட்டதாகவும் தற்போது அந்தநகரம் ரஷ்யப் படைகளின் முழுக் கட்டுப்பாட்டிலுள்ளதெனவும் ஜோர்ஜியா குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜோர்ஜியாவின் தலைநகர் ரிபிலிஸியின் புறநகர் பகுதியிலுள்ள விமானப்படைத்தளம் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசியதாக ஜோர்ஜியா கூறியுள்ளது. இதற்கிடையில் ஜோர்ஜியப் படைகள் முழுமையாக விலகாமையினால் யுத்தநிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லையென ரஷ்யா கூறியுள்ளது. இதனையடுத்து ஜோர்ஜியாவிடமிருந்து பிரிந்துபோன இன்னொரு பகுதியான அப்காஸியாவின் அதிகாரிகள் தாங்கள் முழுவளவில் படைகளைக் குவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமது வடபகுதி நகரான கொடோரிப் பள்ளத்தாக்கிலிருந்து ஜோர்ஜியப் படைகளை விரட்ட ஆயிரம் இராணுவத்தினரை அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் அந்தப்பகுதியிலுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கண்காணிப்புப் படையினரை விலக்கிக்கொள்ளும்படி ரஷ்யா ஐக்கிய நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில் ஜோர்ஜியாவுடனான மோதலில் ரஷ்யா அளவுக்கு மிஞ்சிய ஆபத்தான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் ஜோர்ஜியாவின் இறையாண்மையை மதித்து அந்தநாட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ள ரஷ்ய படைகளை திரும்பப் பெறவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி புஷ் தெரிவித்துள்ளார். சீனாவிலுள்ள அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேம்ஸ் ஜெஃப்ரி ரஷ்யாவின் நடவடிக்கைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அவை அமெரிக்கா ரஷ்யாவுக்கிடையிலான நீண்டகால உறவுகளை பாதிக்கலாமெனத் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த திடீர்போருக்கு ஐக்கிய நாடுகள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளதுடன் போரை நிறுத்துமாறு ரஷ்யா மற்றும் ஜோர்ஜியாவுக்கு ஐக்கிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் இந்த கோரிக்கையினை ரஷ்யா நிராகரித்துள்ளது. இந்தப் போரினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐக்கிய நாடுகள் வன்மையாக கண்டிப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். எனினும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




