| எம்.ஜி.ஆர். உறவினர் கொலையில் தொடர்பு? பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் கைது |
|
|
| வா.கி.குமார் | |
| 12. August 2008 10:15 | |
|
எம்.ஜி. ஆரின் உறவினர் விஜயன் கொலை செய்யப்பட்டதில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் உள்பட 6 பேர் கொண்ட கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த விவரம்: சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை- அண்ணா சாலை சந்தியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். வாகனத்தில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் அரிவாள் கத்திகள், உருட்டுக்கட்டைகள், வாகனங்களில் பயன்படுத்துவதற்கான போலி எண் பலகைகள் ஆகியவை இருப்பது தெரியவந்தன. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் வந்த மணி (23), சார்லஸ் (29), தயாளன் (20), நடராஜன் (34) சந்திரகாந்தன் (20), கணேஷ் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அருகில் உள்ள புலியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். சாராய வியாபாரம் செய்துவருவதாக கூறப்படும் இவர் தனது தொழில் எதிரி ஒருவரை கொலை செய்ய மணி உள்ளிட்ட கூலிப்படையை அழைத்துள்ளார். செந்திலின் அழைப்பின் பேரில் சென்ற கூலிப்படை கும்பல் குறிப்பிட்ட அந்த நபரை கொலை செய்ய முடியாமல் திரும்பும் வழியில் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இவர்களில் மணி, சார்லஸ் ஆகிய இருவரும் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் இருக்கும் சதீஷ் என்பவரின் நெருங்கிய சகாக்கள் என்பது தெரியவந்துள்ளது. இன்னொரு நபரான தயாளன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும், இந்த கும்பலில் இருந்த நடராஜன் என்பவர் மீது வாகன திருட்டு தொடர்பான 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





