| பாகிஸ்தானில் குண்டு வெடித்து 14 பேர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 13. August 2008 08:53 | |
|
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பாலத்தில் பஸ் சென்றபோது, பாலத்தின் கீழ் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. இதில் 14 பேர் பலியானார்கள். பாலத்தின் கீழ் வெடிகுண்டு பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் தலைநகர் பெஷாவர் நகரில் விமானப்படை தளம் உள்ளது. இந்த தளத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தளத்துக்கு பஸ்சில் சென்று திரும்புவது வழக்கம். இந்த பஸ்சில் பயணம் செய்பவர்களை தாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரவாதிகள் செயல்பட்டனர். அவர்கள் பஸ் செல்லும் வழியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வெடிகுண்டு ஒன்றை வைத்தனர். விமானப்படை பஸ் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு விமான தளத்துக்கு செல்வதற்காக அந்த பாலத்தின் வழியாக வந்தது. அப்போது பாலத்தின் கீழ் வைக்கப்பட்ட வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் பஸ் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. பாலத்தில் 10 அடி அகலத்துக்கு குழி விழுந்தது. 14 பேர் பலி பஸ்சில் இருந்தவர்களில் 10 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். மற்றும் 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மேலும் 4 பேர் பலியானார்கள். குண்டு வெடித்ததில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மின்கம்பங்கள் பிடுங்கி எறியப்பட்டன. குண்டின் வீரியம் காரணமாக பாலத்தில் வந்த வேறு சில கார்களும், மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன. விமானப்படை பஸ் முற்றிலுமாக நாசமானது. 30 முதல் 40 கிலோ வெடிபொருள்களை கொண்டு இந்த வெடிகுண்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத குழுவும் பொறுப்பு ஏற்கவில்லை.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






