| சுதந்திர தின கொண்டாட்டம்:1 லட்சம் போலீசார் பாதுகாப்பு -தமிழகம் முழுவதும் உஷார் நிலை |
|
|
| வா.கி.குமார் | |
| 13. August 2008 10:04 | |
|
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோட்டையில் 15 சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் மிரட்டல் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரதினத்தன்று சென்னையிலும், நெல்லையிலும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 11 தீவிரவாதிகளை தமிழகம் முழுவதும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களுடைய புகைப்படத்துடன்கூடிய துண்டு பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களை பற்றி துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சுதந்திரதினத்தன்று தீவிரவாதிகள் ரெயில்களில் குண்டு வைத்து தாக்கக்கூடும் என்று ஒரு எச்சரிக்கை செய்தி மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் ரெயில்களுக்கும், ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் போலீசார் குவிப்பு சுதந்திரதின விழாக்கள் முடியும் வரை தமிழகம் முழுவதும் உஷாராக இருக்கும்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. கே.பி.ஜெயின் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் சுதந்திரதின விழாக்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகரில் 50 முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் இரவு- பகலாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். கோட்டையில் பாதுகாப்பு சுதந்திரதின விழா நடைபெறும் சென்னை கோட்டையை சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றிலும் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுதந்திரதின விழாவுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள் வரும் வழி நெடுகிலும் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை இப்போது இருந்தே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்துகிறார்கள். வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களுடனும் போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டுள்ளனர். கோட்டையின் அனைத்து வாசல்களிலும் கண்காணிப்பு கேமரா உள்ளது. சென்னையிலுள்ள வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றுமë மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாறு வேடத்தில் போலீசார் கண்காணிக்கிறார்கள். லாட்ஜ்களும், ஓட்டல்களும் சோதனை செய்யப்படுகின்றன. போலீஸ் கமிஷனர் சேகர் சுதந்திரதின விழா முடியும் வரை சென்னை நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்றும், சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டை பகுதியில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் அரண் போல் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






தீவிரவாதிகளின் மிரட்டலையொட்டி தமிழகத்தில் நடைபெறும் சுதந்திரதின விழாக்களுக்கு வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
