| ஜோர்ஜிய பிரச்சினை தொடர்பில் ரஸ்ய – பிரான்ஸ் இடையே இணக்கப்பாடு |
|
|
| வா.கி.குமார் | |
| 13. August 2008 20:06 | |
|
ஜோர்ஜியாவின் கிளர்ச்சி இடம்பெற்ற மாகாணங்கள் தொடர்பில் எதிர்கால நிலைகுறித்து சர்வதேச சமாதான பேச்சுவார்த்தைகளின் தேவைப்பாடுகள் தொடர்பில் பிரான்ஸ் மற்றும் ரஸ்ய ஜனாதிபதிளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் இருவருக்குமிடையில் நடந்து முடிந்த பேச்சுவார்த்தைகளையடுத்து ஊடகவியாலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் அண்மைய சண்டைகளுக்கு முன்னர் தாமிருந்த நிலைகளுக்கு திரும்பவேண்டுமென்பதில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் நிக்கலஸ் சர்கோசி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த திட்டத்தை ஜோர்ஜிய அரசங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நிக்கலஸ் சர்கோஸி திபிலிசிக்கு எடுத்துச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜோர்ஜியா மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வடேவ் உத்தரவிட்ட பின்னரே, இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அத்துடன் பிரிந்துபோன கிளர்ச்சிக்குரிய மாகாணங்களில் ரஷ்ய அமைதிகாப்புப் படையினர் தொடர்ந்தும் இருப்பரெனவும்; ரஷ்ய ஜனாதிபதி கூறினார். இதேவேளை தாக்குதலை நிறுத்திவிட்டதாக ரஷ்யா அறிவித்தது முதல் இரண்டு தரப்புமே மறுதரப்பு தாக்குதலைத் தொடர்வதாக குற்றஞ்சாட்டிவருகின்றன. தென் ஒஸெட்டிய எல்லைக்கருகேயுள்ள இரண்டு கிராமங்களின் மீது ரஷ்யா குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஜோர்ஜியா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் ஜோர்ஜியாவின் இந்தக் குற்றச்சாட்டு, தூண்டிவிடும் நோக்குடையதெனக் கூறி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இதனை நிராகரித்துள்ளது. ஜோர்ஜியாவின் மேற்கே பிரிந்துபோயுள்ள அப்காசியாவின் பிரிவினைவாதப் படைகள், தமது இராணுவத்தினர் கொடோரி பள்ளத்தாக்கிலுள்ள ஜோர்ஜியப் படைகளுக்கு எதிராக முன்னேறிவருவதாகக் கூறியுள்ளன.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





