| இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை காலதாமதமாக நடக்கவில்லை டாக்டர் ராமதாசுக்கு தமிழக அரசு விளக்கம் |
|
|
| வா.கி.குமார் | |
| 15. August 2008 18:02 | |
|
மருத்துவ கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை காலதாமதமாக நடக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுப்புராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ராமதாஸ் அறிக்கை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 2-ம் கட்ட கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டது, `திட்டமிட்ட சதி' என்று பா.ம.க. நிறுவனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு 11.8.08 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட அட்டவணை தயாரிக்கப்பட்டதில் எந்த விதமான உள்நோக்கமும் இல்லை. மேலும், முதல்கட்ட கலந்தாய்வு 4.7.08 அன்று ஆரம்பிக்கப்பட்டபோது, தர்மபுரியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு, நடப்பு கல்வி ஆண்டிலேயே அனுமதி எதிர்பார்க்கப்பட்டது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டால், பின்னர் அவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் முதற்கண் சேருவதற்கோ அல்லது மாறுதல் செய்வதிலோ சிரமம் ஏற்படும். பாதிப்புக்கு உள்ளானார்கள் சென்ற ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடமாற்றத்தின்போது, மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சான்றிதழ்களை திரும்ப பெறுவதிலும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் செலுத்திய கல்விக் கட்டணத்தை திரும்ப பெறுவதிலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டுதான், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வில் அறிவிக்கப்பட்டது. 5.7.08 அன்று தான் தர்மபுரி மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைத்தது. எனவே, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கும், இதர தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் சேர்த்தே 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டது. காலதாமதம் இல்லை முதல் கட்ட கலந்தாய்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைத்திருக்குமேயானால் அதனுடன் சேர்த்து தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றிருக்கும். எனவே, அரசு மருத்துவ கல்லூரிக்கான 2-ம் கட்ட கலந்தாய்வுடன் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையையும் இணைத்து 11.8.08 முதல் நடத்தியதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. அகில இந்திய மருத்துவக்கழகத்தால் 2-ம் கட்ட கலந்தாய்விற்கான கால ஒதுக்கீடு 25.8.08 முதல் 28.8.08 வரை ஆகும். ஆனால், மாணவர்களின் நலன் கருதி, உரிய காலத்தில் பாடங்கள் தொடங்கவும், மாணவர்கள் புதிய சூழ்நிலைக்கு தயாராகவும் 2-ம் கட்ட கலந்தாய்வு சற்று முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது. இதில் எந்த வித கால தாமதமும் கிடையாது. கல்லூரி தொடங்குவதற்கு கடந்த 2006-07-ம் ஆண்டு முதல் கட்ட கலந்தாய்வு 10.7.06 முதல் 17.7.06 வரை நடைபெற்றது. 2-வது கட்ட கலந்தாய்வு 10.8.06 முதல் 28.8.06 வரை நடைபெற்றது. 2007-08-ம் ஆண்டு முதல் கட்ட கலந்தாய்வு 9.7.07 முதல் 15.7.07 வரை நடைபெற்றது. 2-வது கட்ட கலந்தாய்வு 27.8.07 முதல் 1.9.07 வரை நடைபெற்றது. நடப்பு ஆண்டில் முதல் கட்ட கலந்தாய்வில் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் கொண்டு வரப்படாததற்கு சில புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆணை சற்று காலதாமதமாக கிடைக்கப் பெற்றதே காரணமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




