| இலங்கை உட்பட குடியேற்றவாசிகளின் கவனத்தை அதிகளவு ஈர்த்துள்ள இடமாக சைப்பிரஸ் தீவு |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 13:24 | |
குடியேற்றவாசிகளின் கவனத்தை அதிகளவு ஈர்த்துளள இடமாக தற்போது சைப்பிரஸ் தீவு மாறியுள்ளது. 2004 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தீவு இணைந்துகொண்ட பின்னர் புகலிடம் கோருவோரை அதிகளவு உள்ளீர்க்கும் இடமாக (விகிதாசாரத்தில்) சைப்பிரஸ் காணப்படுகிறது.
ஐ.நா. புள்ளிவிபரங்களின் பிரகாரம் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் புகலிடம் கோரி சைப்பிரஸிற்கு விண்ணப்பிக்கப்பட்டு ஆய்வுக்காக கோவையில் உள்ளன. 2007 இல் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 94 சதவீதமானவை நிராகரிக்கப்பட்டுள்ளன. சைப்பிரஸில் புகலிடம் கோருவோரில் அநேகமானவர்கள் சிரியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் பாலஸ்தீனம், ஈராக், ஈரான், துருக்கியைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களே சாதகமான முறையில் பரிசீலிக்கப்படுவதாக ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நோக்கங்களுக்காகவே அதிகளவு குடியேற்றவாசிகள் வருவதாக கூறப்படுகிறது. நிரந்தரமாக அல்லது நீண்டகாலம் தங்கியிருப்பதற்கான கோரிக்கைகளே விண்ணப்பங்களில் தெரிவிக்கப்படுகின்றன என்று புகலிட சேவைத்துறைத் தலைவரான மக்கிஸ் பொலிதோரூ கூறியுள்ளார். மத்திய தரைக் கடல் தீவான சைப்பிரஸ் பற்றி ராகேல் என்ற நைஜீரியப் பெண் கேள்விப்பட்டதில்லை. ஆனால் சிறிய படகில் நைஜீரியாவிலிருந்து சைப்பிரஸுக்கு அவர் வந்துள்ளார். அங்கு பலவந்தமாக விருத்தசேதனத்துக்குட்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். சைப்பிரஸில் 60 ஆயிரம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தற்போது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1974 இல் துருக்கியின் படையெடுப்பின் பின்னர் சைப்பிரஸ் தீவு கிரேக்க சைப்பிரஸ், துருக்கி சைப்பிரஸ் என்று இரு சமூகங்களை கொண்டதாக பிரிந்தது. சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரச்சினையால் நிதி, நிர்வாக சிக்கல்களை சைப்பிரஸ் எதிர்நோக்கியுள்ளது. இவர்களின் பிரச்சினைகளை துரிதமாக சைப்பிரஸ் கையாள வேண்டுமென ஐரோப்பிய மனித உரிமை பேரவையின் ஆணையாளர் தோமஸ் ஹம்மர்பேர்க் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும் சைப்பிரஸ் அரசும் இணைந்து ஒரேயொரு புகலிட நிலையத்தையே அமைத்துள்ளன. சைப்பிரஸ் சிறை போன்று இருப்பதாக ராகேல் என்ற பெண் கூறியுள்ளார். ஆனாலும் தனது நாட்டிற்கு தான் ஒருபோதும் திரும்பிப்போகமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கிரேக்க, துருக்கிய சமூகங்களை பிரிக்கும் 180 கிலோமீற்றர் நீளமான ஐ.நா.வின் கட்டுப்பாட்டிலுள்ள கிரீன் கோட்டையை அதிகளவு ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிக்க வேண்டுமென சைப்பிரஸ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். துருக்கிய வலயத்திற்குள்ளாகவே அதிகளவு சட்டவிரோத குடியேற்றவாசிகள் சைப்பிரஸுக்குள் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிரேக்க, சைப்பிரஸ் மக்கள் கிரேக்கத்துடன் இணைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது துருக்கி சைப்பிரஸின் வடபகுதியை ஆக்கிரமித்தது. அதனால் 1974 இல் சைப்பிரஸ் பிரிந்தது. சைப்பிரஸின் சனத்தொகை 7 இலட்சத்து 60 ஆயிரமாகும். வடக்கு சைப்பிரஸையே அங்காரா அங்கீகரித்துள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






குடியேற்றவாசிகளின் கவனத்தை அதிகளவு ஈர்த்துளள இடமாக தற்போது சைப்பிரஸ் தீவு மாறியுள்ளது. 2004 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தீவு இணைந்துகொண்ட பின்னர் புகலிடம் கோருவோரை அதிகளவு உள்ளீர்க்கும் இடமாக (விகிதாசாரத்தில்) சைப்பிரஸ் காணப்படுகிறது.
