| வாக்களிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம்: ஏ.பி. பரதனை விசாரிக்க நாடாளுமன்றக் குழு முடிவு |
|
|
| வா.கி.குமார் | |
| 21. August 2008 08:15 | |
|
மக்களவையில் அரசை ஆதரித்து வாக்களிக்க சில எம்.பி. க்களுக்கு பணம் தரப்பட்டதாக எழுந்துள்ள புகாரை விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதனிடம் இதுபற்றி விசாரிக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மீது கடந்த ஜூலை 22-ம் தேதி மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது பா.ஜ.க. வைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் மக்களவைத் தலைவரிடம் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளைக் காட்டினர். அரசை ஆதரித்து வாக்களிக்க, சமாஜ்வாதி கட்சியினர் இந்த பணத்தை கொடுத்ததாக அவர்கள் கூறினர். இந்த புகாரை விசாரிக்க காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திர தேவ் தலைமையில் நாடாளுமன்றக் குழுவை அமைத்தார் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி. எம்.பி.க்களை விலைக்கு வாங்க காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், ஒரு எம்.பி.க்கு ரூ.25 கோடி தரப்படுகிறது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக ஏ.பி.பரதன் கூறியிருந்தார். எனவே இது தொடர்பாக அவருக்குத் தெரிந்த விஷயங்களை கேட்டறியும் நோக்கில் அவரை அழைத்து விசாரிக்க நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது. புகார் கூறிய எம்.பி.க்கள் அளித்த சாட்சிகளை பதிவு செய்யும் பணியை நாடாளுமன்றக் குழு முடித்து விட்டது. வரும் 27-ம் தேதி இந்த குழு மீண்டும் கூடி தனது அறிக்கையை இறுதி செய்யும். 29-ம் தேதிக்குள் இந்த குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருக்கிறார். இந்த குழுவில் பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் உள்ளனர். எனினும் அவர்கள் கட்சி சார்பாக செயல்படாமல், நடுநிலையோடு விசாரணையை நடத்தியுள்ளனர். அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தி உண்மையல்ல என்று இக்குழுவின் தலைவர் கிஷோர் சந்திர தேவ் கூறினார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|






