| ஐ.டி. நிறுவனங்களால் டீசல் தட்டுப்பாடு: தமிழக அரசு விளக்கம் |
|
|
| வா.கி.குமார் | |
| 22. August 2008 21:06 | |
|
தமிழகத்தில் வழக்கமான அளவை விட, 15 சதவீதம் நுகர்வு அதிகரித்துள்ளதால் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி கூறினார். பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள் டீசலை அதிகம் பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்றார் அவர். இது குறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:- "டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோருடன் வியாழக்கிழமை பேச்சு நடத்தினோம். தட்டுப்பாடின்றி டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. நுகர்வு அதிகரிப்பு... தமிழகத்துக்கு ஒரு மாத டீசல் தேவையின் அளவு 4.2 லட்சம் கிலோ லிட்டர் ஆகும். தற்போது, மேலும் 15 சதவீதம் அளவுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், தகவல் தொழில்நுட்பம் போன்ற நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்குவதால் போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளுக்காக அவர்களுக்கு டீசல் தொடர்ந்து தேவைப்படுகிறது. மின் தேவைக்காக டீசல் மூலம் ஜெனரேட்டர் போன்றவையும் இயக்கப்படுகின்றன. தற்போது, பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் மூலம், நீர்மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி தொடங்கும் என நம்புகிறோம். இதன்மூலம், மின் உற்பத்திக்கு டீசல் பயன்பாட்டின் அளவு குறையும். இப்போது இல்லை... பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மூலம், 75 சதவீதம் அளவுக்கு டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசலுக்கு புதன்கிழமை தட்டுப்பாடு நிலவியது. தற்போது, எந்தப் பிரச்னையும் இல்லை. மத்திய அரசுடன் பேசி... தமிழகத்துக்கு கூடுதலாக தேவைப்படும் டீசலை, மத்திய அரசிடம் இருந்து பெற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாதந்தோறும் தமிழகத்துக்குத் தேவையான டீசலின் அளவை பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு கண்காணிக்கும். தேவைப்பட்டால் கூடுதல் விலை கொடுத்து டீசல் வாங்கவும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றார் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி.
அரசு சிறப்பு தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உணவுத் துறை செயலாளர் க.சண்முகம், ஆணையர் க.ராஜாராமன் ஆகியோர் பேட்டியின்போது உடனிருந்தனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





