| மூழ்கும் கப்பலில் தி.மு.க.: மார்க்சிஸ்ட் செயலர் வரதராஜன் |
|
|
| வா.கி.குமார் | |
| 22. August 2008 21:17 | |
|
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தவர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் காணாமல் போவார்கள்' என்று இடதுசாரிகள் மீது நெருப்பை உமிழ்ந்திருக்கிறார். கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையத்திற்கான ஒப்பந்தம் ஒன்றுபட்ட சோவியத் யூனியனோடு போடப்பட்ட ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச அரசியல் நிபந்தனை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் கூடங்குளம் அணுமின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான யுரேனியத்தையும் ரஷ்யா நமக்கு வழங்க உள்ளது. இதற்கும் அமெரிக்காவோடு போடப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்துக்கும் சம்பந்தமில்லை என்பது ஏனோ ஆர்க்காடு வீராசாமிக்குப் புரியவில்லை. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் சீன அரசுக்கும் தொடர்பில்லை. சர்வதேச அணுசக்தி முகமையில் (ஐ.ஏ.இ.ஏ.) இந்தியாவை சீன அரசு ஆதரித்துள்ளது. 2007-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதம் நடைபெறும்போது பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் சீனாவோடு சேர்ந்து சதி செய்கிறார்கள் என்று அர்த்தமாகுமா? சேது கால்வாய்த் திட்டத்தில் வகுப்புவாதிகளுக்கு எதிராக உறுதியான நிலையெடுக்காத காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்தான் திமுக அமைச்சர்கள் உள்ளனர். 2004-க்குப் பிறகு இடம் பெற்றுள்ள ஐ.மு.கூ. அரசு கடைப்பிடித்த தவறான கொள்கையினால், பல மாநிலங்களில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இத்தகைய காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் திமுக, இடதுசாரிகள் மீது குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது. கடந்த நான்காண்டு காலத்தில் திமுக-வும் இடம்பெற்றுள்ள ஐ.மு. கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கர்நாடகம், இமாசலப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்பட சில மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரசும், அதன் கூட்டணியினரும் மண்ணைக் கவ்வியுள்ளனர் என்பது வரலாறு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் திமுக கூட்டணி தொடருமேயானால் இதே நிலை தான் அவர்களுக்கு ஏற்படும். அமெரிக்க நலனுக்கு ஆதரவாக நிற்கும் காங்கிரசோடு இணைந்து நிற்கிறது திமுக. காங்கிரஸ் எனும் மூழ்கும் கப்பலில் பயணம் செய்ய திமுக விரும்பினால் அது அவர்களது முடிவு'' என்று வரதராஜன் தெரிவித்துள்ளார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





காங்கிரஸ் எனும் மூழ்கும் கப்பலில் பயணம் செய்ய தி.மு.க. விரும்புகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுச் செயலர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
