| ஆடு விற்கச் சென்று காணாமல்போன இரு இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 13:43 | |
|
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியிலிருந்து ஆடு விற்பதற்காக கடந்த 18 ஆம் திகதி காத்தான்குடிக்குச் சென்ற போது காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவர் சடலமாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை அம்பாறை, நிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் இதில் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது; கடந்த 18 ஆம் திகதி ஆரையம்பதி பகுதியிலிருந்து கே.துஷாந்தன் (வயது 25)இ யோகநாதன் சுரேஷ் (வயது 16) ஆகிய இருவரும் ஆடு விற்பதற்காகக் காத்தான்குடிக்குச் சென்ற போது காணாமல் போயினர். இவர்களைத் தேடியும் காணாமல் போனதால் இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டதுடன் இவர்களை விடுவிக்கக் கோரி ஆரையம்பதியிலும் , மட்டக்களப்பு மாவட்டம் முழுவதிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இவர்களை ஆயுதக் குழுவொன்றே கடத்தியதாகவும் ஆரையம்பதி மக்கள் கூறி வந்த நிலையில் காணாமல் போன இருவரில் ஒருவரது சடலம் கைகள், கால்கள் கட்டப்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் நிந்தவூர் ஆஸ்பத்திரி வீதி கடலோரத்தில் வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியது. இந்தச் சடலம் அடையாளம் காண முடியாதளவிற்கு இருந்த போதும் கல்முனை வடக்கு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை நேற்று நண்பகல் இவரது மைத்துனர் அடையாளங்காட்டினார். ஆரையம்பதி ஆர்.சி. வீதியை சேர்ந்த க.துஷாந்தன் என்பவரது சடலமே இதுவாகும். இதையடுத்தே, கடந்த 18 ஆம் திகதி காத்தான்குடிப் பகுதியில காணாமல் போனவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர் குறித்த தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி தகவல் பரவியதையடுத்து ஆரையம்பதி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




