| பொரலஸ்கமுவவில் தாக்குதல் நடத்திய பெண் தற்கொலை குண்டுதாரி |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 16:58 | |
|
விவசாய அபிவிருத்தி மற்றும் விவசாய சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீதான தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி தொடர்பான தகவல்களைத் தந்துதவுமாறு பொதுமக்களிடம் படையினர் உதவி கோரியுள்ளனர்.
பொரலஸ்கமுவ பிரிவெனா சந்தியருகில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மயிரிழையில் உயிர்தப்பினார். எனினும் இந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் ஐவர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. பெண்குண்டுதாரியின் தேசிய அடையாள அட்டை, அவரது கையடக்கத் தொலைபேசியின் சிம்கார்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேநேரம் இந்தத் தாக்குதலுக்கு தற்கொலைக் குண்டுதாரி, சுமார் ஒன்றரை கிலோ வெடி மருந்தைப் பயன்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருவதாக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். தற்கொலைக் குண்டுதாரி கடந்த சில தினங்களாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடமாடியவரென்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தங்கள் விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அவர்கள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் இது தொடர்பாக ஏதாவது தகவல் கிடைத்தால் உடனடியாக 119,2662311,262323,28854931 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர். இதேநேரம் இந்தத் தாக்குதல் தொடர்பாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






