| அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பா.ஜ.க.வும் புறக்கணிக்கிறது: இல. கணேசன் அறிவிப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 19:55 | |
|
இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக பா.ஜ.க.வும் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (அக். 14) சென்னையில் நடக்கவுள்ள இக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ஏற்கெனவே அ.தி.மு.க.வும், அதனுடைய கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.வும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை ராணுவத்துக்குத் துணைபோகும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. தனக்கு உள்ள அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மத்திய அரசு உடனடியாக தனது கடமையை செய்யும்படி வலியுறுத்துவதை விட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் மூலம் எந்த தீர்மானம் நிறைவேறினாலும் அது இலங்கை வாழ் தமிழர்களுக்கு எந்தவித நன்மையோ தமிழ் மக்களை திருப்திபடுத்துவதாகவோ அமையப் போவதில்லை. இலங்கை வாழ் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் பா.ஜ.க. உறுதியுடன் தொடர்ந்து குரல் கொடுக்கும். இருந்தாலும் செயல்படாத மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு கூட்டும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என சனிக்கிழமை கூடிய மாநில உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டது என இல. கணேசன் தெரிவித்துள்ளார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|







