| பின்லாந்து முன்னாள் அதிபருக்கு நோபல் சமாதான பரிசு |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 20:18 | |
|
பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நார்வே நாட்டைச் சேர்ந்த நோபல் கமிட்டி, அறிவியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி வருகிறது. அமைதிக்கு சமாதானத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசுக்கு பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மர்த்தி அத்திசாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை நார்வே நோபல் கமிட்டி தலைவர் ஆலே தன்போல்ட் ஜோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சர்வதேச பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல்வேறு கண்டங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமாதான முயற்சியில் ஈடுபட்டதை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக ஆலே போல்ட் ஜோஸ் கூறியுள்ளார். மர்த்தி அத்திசாரியின் முயற்சிகள் அமைதியான உலகத்தை உருவாக்க துணைபுரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ரூ.6 கோடி சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கும் விழா, நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் டிசம்பர் 10-ந் தேதி நடைபெறுகிறது. அதில் பின்லாந்து முன்னாள் அதிபர் மர்த்தி அத்திசாரிக்கு இவ்விருது வழங்கப்படும். இது நோபல் பட்டயமும், பதக்கமும், ரூ.6 கோடியே 37 லட்சத்துக்கான காசோலையும் கொண்டது ஆகும். வாழ்க்கை குறிப்பு நோபல் பரிசு பெறும் மர்த்தி அத்திசாரியின் வயது 71. இவர் ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 1960-களின் இறுதியில் தூதரக பணியில் சேர்ந்தார். 1994-ம் ஆண்டு பின்லாந்து அதிபர் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி, மர்த்தி அத்திசாரியை வேட்பாளராக நிறுத்தியது. அதில் வெற்றி பெற்று அதிபர் ஆனார். சமாதான பணிகள் செர்பியாவுக்கும், அதன் ஒரு பகுதியான கொசோவாவுக்கும் இடையிலான பிரச்சினையில் சமரசம் செய்து வைப்பதற்காக, கடந்த 2005-ம் ஆண்டு மர்த்தி அத்திசாரி, ஐ.நா. சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டார். இந்த சமாதான முயற்சியில் அவர் கொசோவாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக செர்பியா குற்றம் சாட்டியது. கொசோவாவுக்கு விடுதலை அளிக்க மர்த்தி அத்திசாரி சிபாரிசு செய்தார். ஆனால் அதை செர்பியா ஏற்காததால் உடன்பாடு ஏற்படவில்லை. பிறகு, 2007-ம் ஆண்டு கொசோவா, தன்னிச்சையாக தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது. அதை உலக நாடுகள் வரவேற்றன. கடந்த 2005-ம் ஆண்டில் இந்தோனேசிய அரசுக்கும், அசே மாகாண தீவிரவாதிகளுக்கும் இடையிலான சண்டையை தீர்த்து வைத்ததிலும் மர்த்தி அத்திசாரி முக்கிய பங்காற்றினார். இதனால் 30 ஆண்டுகளாக நீடித்த போர் முடிவுக்கு வந்து சமாதானம் பிறந்தது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





